

கட்டிடக் கலையைக் கற்ற பொறியாளர்களும் வியக்கும் வகையில் மிக நுணுக்கமான கூடுகளைக் கட்டும் பறவைகள் இயற்கை அன்னையின் வியத்தகு படைப்புகள். சின்னஞ்சிறிய தையல் சிட்டின் கூடுதான் எவ்வளவு உறுதியானது! புல் விதைகளுடன் சிறு நார்களை இணைத்து முடிச்சுப் போட்டு இலையின் மேற்பகுதியில் பொருத்திவிடுகிறது.
அதனால் இலையின் கீழே நார் உருவிப்போனாலும்கூட, உறுதியாகப் பிணைந்துவிடும். இலைகளின் அடிப்புறம் நார்களால் இணைத்துத் தைத்த எழில்மிகு கூடு. தன் சிறிய அலகால் நாரைக் கிழித்து, அதைப் புல் விதையுடன் முடிச்சிட்டு, மிக நேர்த்தியாகத் தைத்திருக்கும் அழகைக் காண்கையில் வியப்பே மிஞ்சுகிறது. தையல் இயந்திரம் இதனுடன் போட்டியிட இயலாது. ஈடில்லா உழைப்பின் இணையில்லா வடிவம்.
தூக்கணத்தின் கூடு
அதுபோன்றே தூக்கணாங் குருவியின் கூடும் வியப்பில் ஆழ்த்தும். என்னே ஒரு தொழில்நுட்பம்! இந்தச் சிறு உயிர்கள் எப்படித்தான் இவ்வளவு நுட்பமாகச் செய்கின்றனவோ! எங்களுக்கு அருகிலிருந்த தோட்டத்தில் ஒரு மரத்தில் தூக்கணத்தின் கூடுகள் நிறையத் தொங்கிக் கொண்டிருந்தன. அருகிலேயே தண்ணீரும் கூடு கட்டத் தேவையான கரும்புப் பயிரும் இருந்தன.
கரும்புத் தோகைகளிலிருந்து நீண்ட நார்களை அவை உரித்தெடுக்கின்றன. எனவே, கரும்பு பயிரிடும் இடத்திற்கு அருகில் நிறையக் கூடுகள் தொங்கும். ஆண் பறவை கூடு கட்டி முடித்த பின் அந்தக் கூடு தனக்குப் பிடித்தால் மட்டுமே பெண் பறவை இணைசேருமாம்.