

‘மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி’ என்கிற சொலவடை பாறு கழுகுகளின் தற்போதைய சூழலுக்கு அப்படியே பொருந்தும். ஏற்கெனவே கால்நடைகளுக்கு வழங்கப்பட்ட டைக்ளோஃபெனாக் போன்ற வலி குறைப்பு மருந்துகளாலும், ஊனுண்ணிகளைக் கொல்லும் நோக்கோடு இறந்த கால்நடைகள் மீது தடவப்பட்ட விஷத்தாலும், விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை உண்பதாலும் பெரும் அழிவைச் சந்தித்த இக்கழுகு இனங்கள், தற்போது உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளில் மோதியும் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
ஏன் பாறு கழுகுகள் அவசியம்?
இந்தியாவில் பாறு கழுகுகள் இல்லாது போன இடங்களில் ஆய்வு மேற்கொண்டபோது, சடலங்கள் அழுகி நோய் பரவியதாலும், வெறிநாய்கள் அதிகரித்து ரேபிஸ் தாக்கியதாலும் ஆண்டுக்குச் சுமார் 1 லட்சம் மனிதர்கள் கூடுதலாக உயிரிழந்துள்ளனர் என்பதை ஆய்வாளர் இயல் பிராங்க் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.
நாம் ஏளனமாகவும் இழிவாகவும் பார்க்கும் உயிரினங்களைப் பற்றிய பார்வையை மேற்கண்ட ஆய்வு மாற்றி அமைத்தது. அதிக மக்கள்தொகை, முழுமையான சுகாதாரக் கட்டமைப்பை எட்ட வேண்டிய நிலையும் கொண்ட இந்தியாவில், இயற்கையின் துப்புரவுப் பொறியாளர்களான பாறு கழுகுகளின் இருப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.