

ஆதொண்டை
மூவேந்தர்களின் குடிப்பூக்கள் நமக்குத் தெரியும். தொண்டை மண்டலம் எனப்பட்ட வட தமிழகத்தின், பல்லவர்களின் குடிப்பூ என்ன? தொண்டை மண்டலம் என இது அழைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த தாவரம் ஆதொண்டை.
சென்னையின் இயற்கை வரலாறு குறித்து சு.தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரை ஒன்றைப் (Madras Chennai- A 400 Year Record of The First City of Modern India, Ed-S.Muthiah, Palaniappa Brothers) படித்தபோதுதான், ஆதொண்டைப் பூ குறித்து அறிந்துகொண்டேன்.
மூவேந்தர்களின் குடிப்பூ இலக்கியத்தில் இடம்பெற்றதாலும், வரலாற்றுத் தொடர்ச்சியாலும் அறியப்பட்டுள்ளது. அதேநேரம் ஆதொண்டை அந்த அளவுக்குப் பரவலான கவனத்தைப் பெறவில்லை.
சிவப்பு பூமி சர்க்கரை, கொடுமுள் ஆதண்டை என்கிற பெயர்களும் இதற்கு உண்டு. முட்டை வடிவ இலைகள் தடித்து இருக்கும். இலையை உதிர்க்கக்கூடிய இந்தப் படரும் தாவரம், 12-24 அடி உயரம் வளரும். பற்றுக்கொடியான இதற்கு முட்கள் உண்டு. வெள்ளை மலர்கள் வாடும்போது செந்நீல நிறமாகும். கவர்ச்சிகரமான இதன் மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள், பறவைகளை ஈர்க்கும்.
இதன் மலர்களை தாம்பரம் பகுதியில் உள்ள அகரம் தென் ஏரி அருகே நானும் பார்த்திருக்கிறேன். பச்சையான காய்கள், பழுக்கும்போது சிவப்புப் பழங்களாக மாறுகின்றன. செரிமானத்துக்கு உதவும் இது ஊறுகாய் போடப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.
குடிப்பூ தனித்தன்மை
இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியாவுக்கான இந்தத் தாவரத்தை நாடு முழுவதும் உள்ள புதர்க்காடுகள், வறண்ட இலையுதிர் காடுகளில் பார்க்கலாம். காட்டு ஆதொண்டை/கொக்கிமுள் ஆதொண்டை என்றொரு வகையும் உள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆதொண்டை வகைகள் உள்ளன. வேந்தர்களுக்கான குடிப்பூக்களைத் தேர்ந்தெடுத் ததிலும் தனித்தன்மை உள்ளது. பாண்டியரின் வேம்பு ஒரு மரம், சேரர்களின் பனை புல்லினத்துக்கு நெருக்கமானது, சோழர்களின் ஆர்/ஆத்தி ஒரு புதர்ச்செடி, பல்லவர்களின் ஆதொண்டை ஒரு பற்றுக்கொடி.