

தெருவோரப் பழக்கடைகளிலும் அங்காடிகளிலும் ‘முடவாட்டுக்கால் கிழங்கு கிடைக்கும்’ என்கிற பெயர்ப்பலகையைப் பார்க்க முடிகிறது. சற்றே செம்பட்டையான நிறத்தில், ஆட்டுக்கால் போன்ற தோற்றத்தில் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இதன் விற்பனை பரவலாகச் சூடுபிடித்துள்ளது.
‘கை கால் மூட்டு வலிக்கு அருமருந்து’, ‘சைவ ஆட்டுக்கால்’, ‘4,000 நோய்களைக் குணமாக்கும் அதிசயக் கிழங்கு’ என யூடியூப் அலைவரிசைகளில் பரப்பப்படும் தகவல்கள், மக்களிடையே தேவையற்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.
‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் இருக்கும் மக்களும், இதன் பின்னணியைப் பற்றி அறியாமல் ஆர்வமாக வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கர்நாடகத்தின் நாகரஹோளே பகுதியில் பாறு கழுகுகள் தொடர்பான கலந்துரையாடலுக்குச் சென்றிருந்தபோது, ஒரு பெரிய மரத்தின் அடிப்பகுதியிலிருந்து மரத்தின் நடுப்பகுதிவரை சுற்றிப் படர்ந்திருந்த ஒரு பெரணிச் செடி (Fern)யைப் பார்த்தேன்.
உடன் வந்த பறவை ஆர்வலர் கிறிஸ்டோபர், “இதைத்தான் முடவாட்டுக்கால் கிழங்கு என்று கூவிக் கூவி விற்கின்றனர் ” என்றார். ‘கிழங்கு’ என்கிற அடைமொழியைக் கொண்டதால் இது மண்ணுக்கு அடியில் விளையும் தாவரம் என்று எண்ணியிருந்த எனது அறியாமையை எண்ணி வெட்கப்பட்டேன்.