

தையல்கார எறும்புகள் | படம்: ப.ஜெகநாதன் |
ஒருநாள் வீட்டின் பின்புறம் வேலை செய்துகொண்டிருந்தேன். அதனால் முன்புறக் கதவை மூடி வைத்திருந்தேன். சற்று நேரம் கழித்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது. வந்து பார்த்தால் கதவருகில் யாரையும் காணோம்.
இன்னும் சற்று வெளியில் வந்தேன். அருகிலுள்ள மரத்திலிருந்து மரங்கொத்தி ஒன்று பறந்தது. அன்று அது மரத்தைக் கொட்டிய ஒலியில் நான் நன்றாக ஏமாந்து போனேன்.
வீட்டுக்கு அருகில் புங்கன், வேங்கை, சந்தன வேங்கை, சரக்கொன்றை, மகிழம், மா, வேம்பு எனப் பல மரங்கள் உள்ளன. 2016ஆம் ஆண்டு நேர்ந்த கடும் வறட்சியில் பல வகை மாமரங்கள், வேறு சில மரங்கள் காய்ந்துவிட்டன.
வீட்டின் பின்புறம் மாம்பழத்தைத் தின்றபின் வீசிய விதையிலிருந்து தானாக முளைத்த செடி இப்போது வளர்ந்து மரமாகிவிட்டது. அந்த மரம் நன்றாகக் காய்க்கத் தொடங்கியிருக்கிறது.
அதில் சிவப்பு நிறத் தையல்கார எறும்புகள் (‘முயிறு' எறும்புகள்) மிகவும் அதிகமாகக் குடியேறியுள்ளன. இலைகளைச் சேர்த்துக் கூடுபோல் அமைத்து நீண்ட நாள்களாக மாமரத்தில் தங்கியுள்ளன. அவை அங்கேயே இருப்பதால் மாம்பழங்களைத் தின்பதற்கு அணில்களோ பிற பறவைகளோ பெரும்பாலும் வருவதில்லை. அதனால் நாங்கள் நல்ல பழங்களைப் பெற முடிகிறது.