

உண்ணிக்கொக்கு | படம்: ப.ஜெகநாதன் |
காட்டில் கால்நடைகள் மேயும்போது புல்லில் இருந்து வெளிப்படும் பூச்சிகளைப் பிடித்து உண்ண உண்ணிக்கொக்குகளும் கூடவே அலையும்.
காட்டில் கால்நடைகள் எங்கு மேய்ந்து கொண்டுள்ளன என்பதைக் கொக்குகளே காட்டிவிடும். கொக்குகளைப் பார்க்கும் போதெல்லாம் ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து; மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து’ என்னும் குறளே நினைவுக்கு வரும்.
கொக்கு தன் நீண்ட கழுத்தை நீட்டியும் குறுக்கியும் இரையைப் பிடிக்க ஆடும் ஆட்டம் மிக அழகானது. பயிரிட நிலத்தைச் சீராக்கும்போதும் பயிரிட்ட பின்னர் நீர் பாய்ச்சும்போதும் கொக்குகள் எங்களுக்கு அருகிலேயே பூச்சிகளைப் பிடிக்கச் சுற்றிக்கொண்டிருக்கும்.
அவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேலை செய்யும்போது வேலைக் களைப்பு சற்றுக் குறையும். நிலத்தை உழும்போது கொக்குகள் உழவு இயந்திரத்தின் (டிராக்டர்) அருகிலேயே அச்சமின்றிச் சுற்றும். சிலமுறை அவை இயந்திரத்தின் முன் பகுதியில் அமர்ந்து சவாரி செய்வதும் உண்டு. அடிபட்டு விடுமோ என நமக்குத்தான் அச்சம்; அவை அஞ்சுவதில்லை!
தேடி வரும் பறவைகள்
கொக்குகளைப் போலன்றிக் கரிக்குருவி (கரிச்சான்) மாட்டின் முதுகில் அமர்ந்தே சவாரி செய்யும். இலவசச் சவாரியில் பறக்கும் களைப்பின்றி உணவைத் தேடிக்கொள்ளும். நிலத்தை உழப் போவதை எப்படித்தான் பறவைகள் அறிகின்றனவோ? உழவு இயந்திரம் காட்டுக்குள் நுழைந்ததும் எங்கிருந்தோ சுமார் ஐம்பது நாகணவாய்கள் (மைனா) அங்கே குவிந்தன.
இவ்வளவு நிறைந்த எண்ணிக்கையில் இதுவரை அவற்றை இங்கே கண்டதில்லை. உணவுக்கான தேடலில் விரைவில் அதற்கான வழியைக் கண்டுகொள்கின்றன. ஒருமுறை காற்றும் மழையும் வந்து கதிர் முற்றிய நிலையில் இருந்த சோளப் பயிர்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டன.