இருளைக் கொல்லும் மாசு

இருளைக் கொல்லும் மாசு

Published on

“மீண்டும்

மீண்டு மீள முடியாத

உலகைத் தேடிச் செல்கிறது

இவ்விரவுகளின் பாதைகள்.

இப்போது இந்த

உலகில் மிச்சமிருப்பது

நானும், இவ்விரவும் மட்டுமே.”

- ரகுபதி

இலங்கை வானொலியின் ஒன்பது மணி செய்திகள் முடிவடைவதற்குள் வீட்டின் ஓடைக்கதவு, முற்றத்துக் கதவுகள் சாத்தப்பட்டு உறக்கத்திற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடும். அகில இந்திய வானொலி திருநெல்வேலி நிலையத்திலிருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி ஒலிபரப்பு நடக்கும் பத்தரை மணிக்கெல்லாம் இரவுக்குள் கனஜோராக காலிறங்கிக் கொண்டிருக்கும்.

சேதாரமில்லாத இரவு மனிதனுக்கு ஒரு மர்மத்தை அளித்தது. அந்த மர்ம குகைக்குள் ஜின்கள், அருவங்கள், நீத்தாரின் ஆவிகள் உள்ளிட்ட பல வாழ்ந்திருந்தன. அகாலங்களிலிருந்து எழும் இனம்புரியா குரல்கள் இரவை இன்னும் ஆழமும் அடர்த்தியும் கொண்டதாக்கின. இருளில் நிற்கும் ஒற்றை மரத்திற்குள் அவ்வளவு அமானுஷ்யக் கதைகள். இம்மாயங்கள்தான் நாம் பகல்களினால் நசுங்கிவிடாமல் தடுத்திருந்தன. நாம் இளைப்பாறுவதற்கும் திகில் கலந்த கிளர்ச்சி பெறுவதற்கும் உரிய மயக்க மாயா திண்ணையொன்றை இரவு நமக்கு உருவாக்கியளித்தது. நாமும் அதில் எல்லாமுமாக இருந்தோம்.

நாம் இன்று மின்சாரக் கடலுக்குள் இரவை முக்கிவிட்டு ஒளியும் இருளுமற்ற மெய்நிகர் போலிக்கரங்களில் நம்மை நாம் ஒப்புக்கொடுத்திருக்கின்றோம். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திற்கேற்ப 2019இல் தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படலாம் என ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. நீர், நிலம், காற்றைத் தின்றுவிட்டு இப்போது இரவின் மடிக்குள்ளும் கைவைக்கின்றன பெருநிறுவனங்கள்.

இயற்கைக்கு ஆதரவான குரல்கள் எழும்போதெல்லாம் அறிவியலுக்கும் வளர்ச்சிக்கும் இவர்கள் எதிரானவர்கள் என்ற முத்திரையை அணிவிக்க ஆள்வோரும் பெரு நிறுவனங்களும் தவறுவதில்லை. அறிவியலுக்கு நாம் எதிரானவர்கள் இல்லை. ஆனால், அறிவியலின் அக்குளில் ஒளிந்திருக்கும் சூரிக்கத்தியையும் கணக்கிலெடுக்கச் சொல்கின்றோம்.

உலகின் தலைசிறந்த அறிவியலாளர் வரிசையில் வைத்துப் பார்க்கப்படும் தாமஸ் ஆல்வா எடிசன், மின்சாரக் கண்டுபிடிப்பிற்கான போட்டியில் எதிர்ப்பக்கத்தைத் தோற்கடிக்கும் மூர்க்கத்தில் யானை உள்ளிட்ட சொல்லற்ற உயிரிகளை அதீதமாகக் கொன்றொழிக்கின்றார் (நூல் பக்கம்: 9, 10, 11) சூரிக்கத்திகள் மெல்ல விரிகின்றன. நமது இரவு ஆக்கிரமிப்பினால் எண்ணற்ற உயிரிகளுக்கு நாம் எல்லா வகையிலும் ஊறுவிளைவிக்கின்றோம். ஊறு ஏற்படுத்துதல் என்பது ஏதோ ஊறுகாய் தொட்டுக்கொள்வது போன்றல்ல. இரவைச் சீரழிப்பதின் வாயிலாக பன்மய உயிரிகளை நாம் இனப்படுகொலை செய்கின்றோம். இதற்கான சான்றுகளை பட்டியலிட்டுள்ளது நூல்.

அறிவு வளர்ச்சியிலும் தேடலிலும் மனிதன் ஏனைய உயிரிகளைவிட மேம்பட்டவன்தான். தேங்கியிருப்பதென்பது, அவனுடைய இயல்புக்கு மாறானதும்கூட. அதற்காக மின்சாரம் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளினால் விண்ணையும் மண்ணையும் ஒரு குவளை நீராகக் குறுக்கி குடித்துவிடத் துடிக்கும் அவனின் மூட எத்தனத்திற்குள் வலுவில் குறுக்கிட வேண்டியுள்ளது.

“ஒளி என்பது புனிதமானது என்ற தத்துவத்தில் முதலில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இயற்கையே எல்லாம்” ( நூல் பக்கம்: 29) .

அகத்தில் ஆயிரமிருள் மண்டிக்கிடக்க புற ஒளியை ஆராதித்து என்ன செய்ய? இருளில்லாமல் ஒளியில்லை, ஒளியில்லாமல் இருளில்லை. இருளும் ஒளியும் இயற்கை என்ற மொத்த வடிவின் ஒரு அங்கம். அதனதற்குரிய பங்கைக் கூட்டாமல் குறைக்காமல் கொடுப்பதற்குத்தான் இத்தனை மெனக்கெடல்களும்.

பகலை நாம் இரவாகவோ அல்லது வேறு எதுவாகவோ மாற்றாமலிருக்கும்போது இரவின் மீது மட்டுமே ஏன் பகல் வண்ணம் பூசுகின்றோம்? இது இரவின் மீதான வன்செயல் இல்லையா? இரவை நிரந்தரமாகக் கொல்லும் நமது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. இரவு என்ற நதிப்பெருக்கின் முன் தலைமுட்டும் எவரும் மாய்ந்து போவார்கள் என்ற பேருண்மையை மனிதனைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லோரும் நன்கறிந்தேயுள்ளனர்.

இயற்கைக்கும் சூழலியலுக்கும் குரல் கொடுக்கும் ஓர் அரசு தமிழகத்தில் அமைந்திருக்கும் சூழலில் முந்தைய அரசின் 2019ஆம் ஆண்டு அரசாணையைத் திரும்பப் பெற்றுவிட்டு, ஒளி மாசு குறித்து கவனம் செலுத்தினால் நல்லது.

நூலின் பெயர்: ஒளியிலே தெரிவது

நூலாசிரியர்: நிவேதா

பதிப்பகம்: பூவுலகின் நண்பர்கள்.

கட்டுரையாளர்: சாளை பஷீர்,

தொடர்புக்கு: shalai_basheer@yahoo.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in