Last Updated : 06 Jul, 2019 10:00 AM

 

Published : 06 Jul 2019 10:00 AM
Last Updated : 06 Jul 2019 10:00 AM

எது இயற்கை உணவு 10: இயற்கை வேளாண்மையால் யார் நமக்கு உணவளிக்கிறார்கள்?

உணவுப் பயிர்கள், விதைகள், உணவுப் பாதுகாப்பு போன்றவற்றை இயற்கை வேளாண்மை மூலம் யார் பாதுகாத்து நமக்கெல்லாம் உணவளிக்க முடியும்?

முன்பே பார்த்ததுபோல், கனடா நாட்டின் இ.டி.சி. என்னும் பெரும் அமைப்பின் ஆய்வறிக்கை கூறியுள்ளதுபோல்- உலகின் மொத்த உணவு உற்பத்தியில் 30% பெரு உழவர்களிடமிருந்தும், எஞ்சிய பெரும் பகுதி-70% சிறு உழவர்களிடமிருந்தும்தான் வருகிறது. (http://www.etcgroup.org/articles) இந்த 70% உணவு உற்பத்தியையும் அவர்கள் 30 சதவீத நிலத்திலிருந்தே உருவாக்குகிறார்கள்.

பெரு உழவர்கள் வெறும் 30 சதவீதத்தை உற்பத்தி செய்வதற்காக 80 சதவீதத் தண்ணீர், புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் உணவுச் சந்தையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். யாரால் முடியும்?

இயற்கை வேளாண்மை நீடித்து நிலைத்திருக்க வேண்டுமானால், அது சிறு குறு உழவர்களால் மட்டுமே முடியும். அவர்களது வேதிப்பொருளற்ற தற்சார்பான இயற்கை வேளாண் முறைகள், குறிப்பாக நீர், ஆற்றலைப் போன்ற வளங்களைக் குறைந்த அளவில் பயன்படுத்தும் இவர்களால்தான், நஞ்சற்ற நல் உணவு கிடைக்கும்.

உயிரினப் பன்மை பாதுகாப்பு, தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற பயிர்கள்/முறைகள், விதைகள், கால்ந‌டை வளர்ப்பு என பலவற்றையும் இவர்கள் மேம்படுத்துகிறார்கள். இந்த வேளாண் முறை வேலைவாய்ப்பை அதிகரிக்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், அண்மைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். சிறு, குறு உழவர்கள் தங்கள் 85 சதவீத உற்பத்தியை உள்ளூர், உள்நாட்டுப் பகுதியிலேயே

விற்பனை செய்கிறார்கள். அதனால் பேரளவு சூழலியல் சீர்கேடுகளும் குறைகின்றன.

நச்சு வேளாண்மை இடுபொருள், கூலிச் செலவு போன்றவை மிக அதிகமாக உள்ள இந்த நாள்களில், சிறு உழவர்களே தம் உழைப்புயை (மாற்றுக் கூலி, சமூக உழைப்புபோல்) அதிகம் சார்ந்திருக்கிறார்கள். அத்துடன் தமது நிலங்களில் பெரிய கருவிகளைப் பயன்படுத்த முடியாமல் தற்சார்பான இயற்கை வழிமுறைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

அதேநேரத்தில் ஒன்றை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்- மேலை நாடுகளைப் போல் நீடிக்க இயலாத, இயற்கைக்கு மாறான வழிமுறைகளைக் கடைப்பிடித்து, பெரும் இயந்திரங்கள், கருவிகள் உதவியுடன் ஒற்றைப் பயிர்/பணப்பயிர், தொழில்நுட்பம் என்னும் பெயரில் பெரும் உழவர்கள் நச்சு வேளாண்மையையே கையிலெடுக்கிறார்கள்.

ஆக, உலக மக்களுக்குத் தேவையான உணவை விளைவிப்பதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தம்மால் மட்டுமே முடியும் எனும் மூடநம்பிக்கையைப் பன்னாட்டு நிறுவனங்களும் சில அமைப்புகளும் உலக அரசுகளிடமும் மக்கள் நடுவிலும் பரப்பிவருகின்றன.

அது பொய் என்பது மீண்டும் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. சமூகநீதி முதல் வாழ்வாதாரம், உணவு உற்பத்திவரை பல்வேறு அம்சங்களைச் சிறு-குறு வேளாண்மையே காப்பாற்ற முடியும். அதிலும் கூட்டு முயற்சிகளே பெரும் பயனளிக்கும்.

கட்டுரையாளர், இயற்கை வேளாண் நிபுணர்

தொடர்புக்கு: organicananthoo@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x