Last Updated : 24 Dec, 2013 12:00 AM

 

Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

பூச்சியுண்ணும் அபூர்வ தாவரம்

பூச்சி, விலங்குகளை உண்ணும் தாவரம் பற்றி அச்சுறுத்தும் வகையில் ஹாலிவுட் படங்களில் சில காட்சிகளை நீங்களும் பார்த்திருக்கலாம். ஆனால், அது போன்று பூச்சியுண்ணும் ஒரு அபூர்வத் தாவரம் ஏற்காடு மலையில் 38 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருவது பலருக்கும் தெரியாது.

இந்தியாவில் பூச்சி உண்ணும் 19 வகை செடிகள் உள்ளன. மேகாலயா மாநிலத்தின் காசி மலையில் நெப்பந்தசேயி எனும் பூச்சி உண்ணும் தாவரம் காணப்படுகிறது. காசி மலையில் அதிகம் காணப்படுவதால், நெப்பந்த சேயி காசியானா என்பது தாவரவியல் பெயர். இது கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியது. ஈரம்மிக்க காடுகள், சதுப்பு நிலங்கள், குட்டை ஓரங்களில் நெப்பந்தசேயி 100 ஆண்டுகள் வரை வாழ்கிறது.

ஒரு அடி உயரம் முதல் 70 அடி உயரம் வரை கொடியாக மரங்களில் தொற்றி, காற்றில் சுற்றித் திரியும் மின்மினி பூச்சி முதல் குழவிகள் வரையிலான பூச்சிகளை பூஜாடி போன்ற தனது பூக்களில் சிக்க வைத்து, இது சாப்பிடுகிறது. வண்டு, நத்தை, குழவி என பூச்சிகளை மட்டுமில்லாமல், குட்டி எலியைக்கூட இந்த வகை தாவரங்கள் சாப்பிடுமாம்.

இவை அசைவத்தை விரும்பிச் சாப்பிடுவதற்குக் காரணம், உயிர் வாழ்வதற்குத் தேவையான புரதச் சத்துகள், அது வளரும் மண்ணில் குறைவாக இருப்பதுதான்.

பூக்களின் உயரம் 10 செ.மீ. முதல் 30 செ.மீ. உயரம் வரை. பூவின் கழுத்து பகுதியில் மூடி போன்ற இலை, குடுவையை மூடியிருக்கும். பூக்குடுவையில் மூன்றில் ஒரு பங்கு பெப்சின் என்ற திரவமும், கழுத்து விளிம்பில் நெக்டார் என்ற சுவையான தேனும் இருக்கும்.

தேன் வாசமும், பூவின் நிறமும் பட்டாம் பூச்சிகள், வண்டினங்களை கவர்ந்து இழுக்கும். ஆபத்தை உணராத பூச்சியினங்கள், பூவின் விளிம்பில் அமர்ந்து தேனை குடிக்கும் நொடியில், சரசரவென வழுக்கிக்கொண்டு பூவுக்குள் பெப்சின் திரவத்தில் விழும்.

ஜாடிக்குள்ளிருந்து பூச்சிகள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக, மெல்லிய இழை போன்ற சிறுமுடிகள் உட்புறம் சிலிர்த்தெழுந்து நிற்கும். இந்த முடிகள், பூச்சிகள் மேலே எழுந்து வராமல் தடுக்கும். பெப்சின் திரவம் பூச்சியை ஜீரணிக்கக்கூடிய சக்தியைக் கொண்டிருப்பதால், மேலே எழுந்து வருவதற்கான பூச்சிகளின் முயற்சி தோல்வியில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாய் திரவத்தில் கரைந்து போகும்.

அடைமழை பெய்தாலும் ஒரு சொட்டு நீர்கூட ஜாடிக்குள் விழுந்து பெப்சின் திரவம் நீர்த்து போகாமல் இருக்க, ஜாடி விளிம்பில் உள்ள இலை, மூடி போலச் செயல்படும்.

பூச்சியுண்ணும் தாவரங்கள் வட இந்தி யாவில் மட்டுமே இயற்கையாக இருந்து வருகின்றன. கடந்த 1975ஆம் ஆண்டு, மேகாலயா மாநிலத்தில் இருந்து ஏற்காடு தாவர வியல் பூங்காவுக்கு 15 நெப்பந்தசேயி செடிகள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு செடி 38 ஆண்டுகளாக இப்போதும் இருக்கிறது.

ஏற்காடு தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த ஏற்காடு இளங்கோ இது பற்றி கூறுகையில், "நாங்கள் பாதுகாத்து வரும் நெப்பந்தசேயி செடி, பெண் தாவரம் என்ற விவரம் ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடிதான் தெரிஞ்சது. அப்பத்தான் இது முதல்முதலா பூத்தது. பக்கத்துல ஆண் நெப்பந்தசேயி செடி இருந்தால் மட்டுமே இதில் மகரந்தச் சேர்க்கை நடக்கும். பிறகு இனவிருத்திக்கான விதைகள் உற்பத்தியாகும். இப்போது அதற்கு வாய்ப்பில்லை.

சமீபத்தில் புது முயற்சியா நெப்பந்தசேயி செடியின் ஒரு பகுதியை வெட்டி, தண்ணீரில் போட்டு வெச்சோம். 15 நாளுக்குப் பின்னாடி, அந்த செடி வேர் விட ஆரம்பிச்சது. இது மாதிரி மூன்று நெப்பந்தசேயி செடிகள வளர்த்து வர்றோம். என்ன ஒரே விஷயம்னா இதன்மூலம் பெண் நெப்பந்தசேயி செடிய மட்டுமே உருவாக்க முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x