

விவசாயத்தின் மீது அதிகரித்த ஆர்வம் காரணமாக ஆசிரியர் பணியிலிருந்து விலகிய கவிதா, இப்போது பலருக்கு வழிகாட்டும் முன்னோடி இயற்கை விவசாயியாகப் பரிணமித்துள்ளார். இவர் 110 பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து வருகிறார். பழநி அடுத்துள்ள ஆயக்குடி கிராமத்தைச்சேர்ந்த கவிதா, தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகரித்ததால், ஆசிரியர் பணியிலிருந்து விலகி முழு நேர விவசாயி ஆகிவிட்டார்.
இது தொடர்பாக அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து… பழநி அடுத்துள்ள ஆயக்குடி கிராமத்தில் இயற்கையோடு ஒன்றியிருக்கும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறோம். நான் பழநியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தேன். அப்போது, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்தும், இயற்கை விவசாயம் குறித்தும் நிறைய படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் நாமும் முழுநேர விவசாயத்தில் ஈடுபடலாமா என்ற ஆர்வம் ஏற்பட்டது.