

எலி போன்ற உருவத்தில், முதுகில் கூர்மையான முட்களைக் கொண்ட சிறிய வகைப் பாலூட்டி முள்ளெலி. இது இரவாடி. ஆகவே பகலில் வளைகளில் உறங்கி, மாலையில் வெளியில் உணவு தேட வரும். ஆபத்து நேர்ந்தால், உடலைப் பந்துபோல் இது சுருட்டிக்கொள்ளும். மூன்று வகையான முள்ளெலிகள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் ஒன்று தென்னிந்திய முள்ளெலி (Paraechinus nudiventris).
இந்தியாவின் தெற்குச் சமவெளிகளில், குறிப்பாகத் தமிழகத்தின் வறண்ட புல்வெளிப் பகுதிகளில் பரவலாகக் காணப்பட்ட தென்னிந்திய முள்ளெலிகளின் எண்ணிக்கை இப்போது அதிவேகமாகக் குறைந்துவருகிறது. தற்போது இவற்றைக் காண்பதே அரிதாகிவிட்டது. காரணம், அவற்றின் வாழ்விடங்களான முட்புதர்கள், புதர் நிறைந்த புல்வெளிகள், வறண்ட குளங்கள், பயிரிடப்பட்ட வயல்களின் ஓரங்கள், மேய்ச்சல் நிலங்கள், பொட்டல் காடுகள் போன்றவை பெரும்பாலும் அழிக்கப்பட்டுவருவதுதான்.