

2023 அக்டோபரில் சிக்கிமில் மிகப் பெரிய பனி ஏரி வெடித்ததால் உண்டான பெருவெள்ளத்துக்கு நீரிடி (cloudburst) காரணம் எனக் கருதப்பட்டுவந்தது. இந்தப் பேரழிவில் டீஸ்டா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 1,200 மெகாவாட் அணை அடித்துச் செல்லப்பட்டது. 55 பேர் பலியானார்கள், ராணுவ வீரர்கள் உள்பட 74 பேர் காணாமல் போயினர், 25,999 கட்டிடங்கள், 31 முக்கியப் பாலங்கள், நான்கு அணைகள், 276 சதுர கி.மீ. வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டன. அத்துடன் 45 நிலச்சரிவுகளும் தூண்டப்பட்டன.
இந்த இயற்கைப் பேரழிவுக்கான உண்மையான காரணம் நீரிடி அல்ல. இமாலய சுனாமி எனப்படும் பெருமளவு பாறை, பனி, வண்டல் ஆகியவை பனி ஏரிக்குள் திடீரென சரிந்ததால் ஏற்பட்ட உந்துதலே வெடிப்புக்கும், பெருவெள்ளத்துக்கும் காரணம் எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. பொதுவாகத் தற்போது நிகழும் பெரும்பாலான இயற்கைப் பேரழிவுகளுக்குக் காலநிலை மாற்றம் காரணமாகச் சுட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக நீரிடியும் காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.