Last Updated : 26 Aug, 2023 06:04 AM

 

Published : 26 Aug 2023 06:04 AM
Last Updated : 26 Aug 2023 06:04 AM

சென்னையில் அறிவியலுக்கான பேரணி

இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அறிவியலின் முக்கியத்துவத்தையும் அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்கும் நோக்கத்துடன் ‘அறிவியலுக்கான இந்தியப் பேரணி’ என்கிற விழிப்புணர்வுப் பேரணிகள் 2017ஆம் ஆண்டு முதல் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

அறிவியல் - தொழில்நுட்ப ஆராய்ச் சிக்கு மத்திய பட்ஜெட்டில் 10 சதவீதம், ஜிடிபியில் 3 சதவீதம் மத்திய அரசு ஒதுக்க வேண்டும். சுற்றுச்சுழலைப் பாதுகாக்கவும் காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் இந்நிகழ்வில் வலியுறுத்தப்படவுள்ளன. சென்னையில் இப்பேரணி ஞாயிறு (ஆகஸ்ட் 27) மாலை 4 மணியளவில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறுகிறது.

அபாயத்தில் சிம்லா: சிம்லாவில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதற்கு 22 பேர் பலியான நிலையில், பலரும் காயமடைந் துள்ளனர். இந்த நிலையில் சிம்லாவின் நிலப்பரப்பில் 33 சதவீதம் நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பு மிதமான ஆபத்தையும், 16 சதவீத நிலப்பரப்பு குறைந்த அபாயத்தையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பசுமை மண்டலப் பகுதிகள் ஆக்கிர மிக்கப்பட்டு சிம்லாவில் நகரமய மாக்கல் மலைப் பிரதேசங்களில் விரிவுப் படுத்தப்படுகின்றன. மேலும் காலநிலை மாற்றம் மழைப் பொழிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படுவது சிம்லாவில் அதிகரித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் நீர் பற்றாக்குறை: உலக மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் ஒவ்வோர் ஆண்டும் அதிகப்படியான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக உலக வள அமைப்பான அக்யூடக்ட் வாட்டர் ரிஸ்க் அட்லஸ் (Aqueduct Water Risk Atlas) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிழக்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவை அதிகத் தண்ணீர் நெருக்கடியுள்ள பகுதிகளை உள்ளடக்கி உள்ளன.

உலக மக்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் வருடத்தில் குறைந்தது ஒரு மாதமாவது நீர்ப் பற்றாக்குறை சூழலில் வாழ்வதாகவும் 2050இல் அந்த எண்ணிக்கை 60 சதவீதத்தை நெருங்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. மேலும், 2050இல் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நீர் தேவை 163% ஆக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தொகுப்பு: இந்து குணசேகர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x