படித்தவுடன் வேலை கிடைக்க...

படித்தவுடன் வேலை கிடைக்க...
Updated on
2 min read

எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனின் மகன், தற்போது 10ஆம் வகுப்பு முடித்துள்ளார். மேலே படிக்க வைக்க அவருக்கு வசதியில்லை. உடனே வேலை கிடைக்கும்படி ஏதாவது படிப்போ பயிற்சியோ இருந்தால் சொல்லுங்கள். - பட்டாபிராமன், ஆவடி.

இன்றைய சூழலில் எவ்வளவு படித்தாலும் சரியான வேலை கிடைக்கவில்லை அல்லது வேலையே கிடைக்கவில்லை என்கிற அங்கலாய்ப்பு பலரிடம் உள்ளது. ஆனால், படித்து முடித்ததுமே வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ள ஐடிஐ படிப்புகளைத் தேர்ந்தெடுக்கப் பலரும் தவறுகின்றனர்.

உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அம்பத்தூர் அரசு ஐடிஐ-யில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் கட்டணமின்றி, அரசின் பல்வேறு சலுகைகளுடன் கற்றுத் தரப்படுகின்றன. குறிப்பாக, தொழில் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ள திறன்களை மையமாகக் கொண்ட பயிற்சிகள் இங்குக் கற்பிக்கப்படுகின்றன.

இங்கு வாகனப் பராமரிப்புப் பணிகளான வாகனப் பழுதுபார்ப்பு, பெயின்டிங்; கட்டுமானத் துறையில் பிளம்பர், சர்வேயர், கட்டிட வரைவாளர், கட்டுமானத் தொழில்நுட்பப் பணிகள்; கணினி - தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினி இயக்குநர், கணினி நிரலாக்க உதவியாளர், கணினிப் பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பப் பயிற்சிகள்; இயந்திரத் தொழில்கள் துறையில் ஃபிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், ஷீட் மெட்டல், கருவி பராமரிப்பு; மின்சாரம் - மின்னணுவியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான தொழிற்பயிற்சிகள்; ஃபுட் அண்டு சர்வீஸ் துறையில் உணவுத் தயாரிப்பு; படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் உள்புற வடிவமைப்பு, அலங்காரக் கலை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இவை அனைத்தும் வேலைவாய்ப்பை உடனே பெற்றுத்தரக்கூடிய எவ்விதச் செலவினமும் இல்லாத படிப்புகள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஸோஹோ பயிற்சி

ஸோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்னிங் என்கிற பயிற்சி நிறுவனத்தைக் கடந்த சில ஆண்டுகளாக ஸோஹோ நிறுவனம் நடத்திவருகிறது. இப்பயிற்சி நிறுவனம் சென்னை, தென்காசி, தருவை, கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ளது. இங்கு மென்பொருள் பொறியியல் (Software Engineering) தொடர்பான இரண்டாண்டுத் தொழில்நுட்பப்பயிற்சிக் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி யில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதியாகப் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்திருக்க வேண்டும். சேர்க்கைக் காகத் தகுதித் தேர்வும் நடத்தப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர் களுக்கு ஸோஹோ நிறுவனத்திலேயே வேலை பெறும் வாய்ப்புகள் அதிகம்.

சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கல்லூரி சி.பி. ராமன் சாலையில் இயங்கிவருகிறது. இங்குக் கட்டணமின்றிப் பல்வேறு திறன்சார் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான படிப்புகள் இரண்டு ஆண்டுகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் சேரக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 15 முதல் 25 வயதுவரை.

படிப்பை முடித்த பிறகு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லூரியில் பெண்களுக்கு மட்டும் ஹெல்த் அசிஸ்டென்ட் பயிற்சியும், ஆண்-பெண் இருபாலருக்கும் லேப் டெக்னீசியன், டயாலிசிஸ் டெக்னீசியன், ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன் ஆகிய மருத்துவத் துறை சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், டெண்டல் சேர்-சைடு அசிஸ்டென்ட் (3 மாதங்கள்), பேக்கரி - கன்பெக்‌ஷனரி (6 மாதங்கள்) போன்ற குறுகிய காலப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

இந்த இரண்டு பயிற்சிகளிலும் சேரக் குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி. இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி நிறுவ னங்கள் அனைத்தும் சென்னை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ளவை. மற்ற மாவட்டங்களில் இயங்கிவரும் இதுபோன்ற நிறுவனங்கள் பட்டியலிடப்படவில்லை. எனவே, அந்த மாணவரின் இலக்கு, ஆர்வம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து படிக்க வைக்கலாம்.

படித்தவுடன் வேலை கிடைக்க...
10 ஆண்டுகள், 10 வேலைகள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in