Published : 19 Oct 2022 05:34 PM
Last Updated : 19 Oct 2022 05:34 PM

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 13

ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

இந்திய வரலாறு - 5
பல்லவர்கள்

சங்க காலத்திற்கு பிறகு 250வருடங்கள் களப்பிரர்கள் ஆட்சி செய்த பின் தொண்டை மண்டலத்தில் தங்களது அரசை
பல்லவர்கள் நிறுவினர். பல்லவர்கள் தோற்றம் பற்றி பல கருத்துக்கள் நிலவினாலும் அவர்கள் தொண்டை மண்டலத்தைc சேர்ந்தவர்களே என்ற கருத்து பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பிராகிருத, வடமொழிப் பட்டயங்கள்

முற்கால பல்லவர்களில் (பொ.ஆ. 250-350) முக்கியமானவர்கள் சிவஸ்கவந்தவர்மன், விஜயஸ்கந்தவர்மன் ஆகியோர் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்.
அடுத்த வந்த மரபினர்(பொ.ஆ.350-500) களில் பெயர் சொல்லக்கூடியவர் விஷ்ணுகோபன். இவர்கள் வடமொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்.
பிற்கால பல்லவர்கள் பொ.ஆ 575 முதல் 9ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடையும் வரை ஆட்சி செய்தனர்.

முதல் மன்னர் சிம்மவிஷ்ணு களப்பிரர்களைத் தோற்கடித்து ஒரு நிலையான ஆட்சியை ஏற்படுத்தினார். இவர் அவனி சிம்மன் என்று அழைக்கப்பட்டார். இவருடைய ஆட்சிக் காலத்தில் தமிழ், வடமொழியில் பட்டயங்கள் வெளியிடப்பட்டன. சோழர்களையும் வென்று காவிரிக்கரை வரை ஆட்சியை விரிவு படுத்தினார்.

முதலாம் மகேந்திரவர்மன் (பொ.ஆ.600-630)

முதலில் சமண சமயத்தில் பற்றுடன் இருந்தாலும் சைவக்குரவர் திருநாவுக்கரசர் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார். திருவதி என்ற இடத்தில் சிவனுக்குக் கோயில் எழுப்பினார். சேத்தகாரி (கோயில் கட்டுபவன்), சத்யசந்தன், சித்திரகாரபுலி (ஓவியத்தில் ஆர்வம்), மத்தவிலாசன், விசித்திர சித்தன்(மண்டகப்பட்டு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது) ஆகிய பட்டப் பெயர்களை முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக்கொண்டார். பல்லாவரம், திருச்சி, மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, வல்லம் , தளவானூர் ஆகிய இடங்களில் குடவரை கோயில்கள் கட்டினார். மகேந்திரபாணி என்ற கட்டடக்கலையை அறிமுகம் செய்தார். பரிவாதனி என்ற வீணை வாசிப்பில் சிறந்தவர்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை இசை கல்வெட்டு அவரது காலத்தது. வடமொழியில் ‘மத்தவிலாசபிரகசனம்’, ‘பகவதாஜ்ஜுகா’ எனும் நாடக நூல்களை எழுதியுள்ளார். இவர் காலத்தில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ருத்ராச்சாரியார்.

முதலாம் நரசிம்மவர்மன் (பொ.ஆ.630-668)

மாமல்லன் (மற்போரில் வல்லவன்) என அழைக்கப்பட்டார்.
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை காஞ்சிபுரத்திற்கு அருகே மணிமங்கலம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் தோற்கடித்து அவரைக் கொன்றார்.
சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி நகரம் அழிக்கப்பட்டு 'வாதாபி கொண்டான்' என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். வாதாபியில் மல்லிகார்ஜுனர் கோயிலை கட்டினார். இவரது படைத்தளபதி சிறுத்தொண்ட நாயனார் என்றழைக்கப்படும் பரஞ்சோதி ஆவார். கடற்படையுடன் இலங்கைக்குச் சென்று இளவரசர் மானவர்மனுக்கு சிம்மாசனத்தை மீட்டுக் கொடுத்தார். யுவான்சுவாங் இவரது காலத்தில் காஞ்சிபுரம் விஜயம் செய்தார். காஞ்சியைப்பற்றி அவர் குறிப்பிடுகையில் மிக அழகான இந்நகரத்தில் நூறு பெளத்த மடங்களில் பத்தாயிரம் பெளத்தத் துறவிகள் வாழ்ந்ததாக கூறியுள்ளார். காஞ்சிக்கடிகை புகழ் பெற்ற கல்விக்கூடம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாமல்லபுரத்தை நிறுவிய நரசிம்ம வர்மன் அங்கு அழகிய ஒற்றைக்கல் ரதங்களையும் அமைத்து அந்நகருக்கு மெருகூட்டினார். 1984 ஆம் வருடம் மாமல்லபுரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய புராதன சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

போர்களற்ற ஆட்சி

முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பின் இரண்டாம் மகேந்திரவர்மன், முதலாம் பரமேஸ்வரனும் ஆட்சி புரிந்தனர். சாளுக்கிய மோதல்களும் தொடர்ந்தன.
ராஜசிம்மன் என்றழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மவர்மன் (பொ.ஆ. 695 -722) ஆட்சிக் காலம் போர்களற்ற காலமாகத் திகழ்ந்தது.
காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுர கடற்கரைக் கோயில் ஆகியவை இவர் கட்டியவை. வடமொழி வல்லுநரான தண்டி இவரது அவையில் இருந்தார். அவரது புகழ்பெற்ற நூல் ‘தசகுமார சரிதம்’.

ஆகமப்ரியன் , வாத்யா வித்யாதரன், சங்கரபக்தன் ஆகிய பெயர்களை இரண்டாம் நரசிம்மவர்மன் சூட்டிக்கொண்டார். சீனா வரை கடல்வழி வாணிபத்தை பெருக்கி வருவாயை கூட்டினார்.

அபராஜிதனை வென்ற ஆதித்யன்

இவருக்குப்பின் இரண்டாம் பரமேஸ்வரன், இரண்டாம் நந்திவர்மன் ஆட்சி செய்தனர். பல்லவர்கள் ஆட்சி பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டு வரைநீடித்தது. கடைசி பல்லவ மன்னனர் அபராஜிதனை சோழ மன்னர் முதலாம் ஆதித்யன் வெற்றிகொண்டு காஞ்சிபுரத்தை கைப்பற்றினார்.

பிரம்மதேயமும் பக்தி இலக்கியமும்

பல்லவர்கள் காலத்தில் பிராமணர்களுக்கு அளித்த நிலங்களுக்கு பிரமதேயம் எனப் பெயரிடப்பட்டது. அந்நிலங்களுக்கு வரி கிடையாது. பொதுவாக நிலவரி மூலமே அரசாங்கத்திற்கு அதிக வருவாய் கிடைத்தது. அமைச்சர்களுக்கு பேரையன், பிரம்மராஜன் என பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டன. சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்களின் பங்களிப்பால் சைவமும் வைணவமும் தழைத்து பெளத்த, சமண மதங்கள் வீழ்ச்சியடைந்தன. கடம்ப குல மயூரசர்மன், பெளத்த அறிஞர் திங்க நாகர் காஞ்சியின் கடிகைக்கு வந்து பயின்றனர். வடமொழிப் புலவர் பாரவி, சிம்மவிஷ்ணு சமகாலத்தவர். அவர் எழுதிய நூல் ‘கிராதார்ஜுனியம்’.

நாயன்மார்களின் தேவாரமும் ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்பிரபந்தமும் பல்லவர்கால பக்தி இலக்கியங்களாகும். நந்திக்கலம்பகம் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை ‘பாரத வெண்பா’ எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தார். மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள வைகுந்த பெருமாள் கோயிலைக் கட்டியவர் இரண்டாம் நந்திவர்மன்.

பண்புமிக்க காலம்

அதிசயத்தக்க சிற்பங்களைக் கொண்ட 'திறந்த வெளி கலைக்கூடம்' மாமல்லபுரத்தில் உள்ளது. மகிஷாசுர மர்த்தினி, திருமூர்த்தி, வராஹர் மண்டபங்களில் சிறப்பானவை. ஓவியக்கலை விளக்க நூலான ‘தட்சிண சித்திரம்’ மகேந்திரவர்மன் காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் (தற்போது புதுக்கோட்டை மாவட்டம்) ஓவியங்களும் பல்லவர் காலத்தவையே. திருமயம் இசை கல்வெட்டும் பல்லவர்களால் உருவாக்கப்பட்டதாகும். காசக்குடி செப்பேடுகளில் பல்லவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. பொதுவாகப் பல்லவர்கள் காலம் பண்புடன் சிறப்புற்று விளங்கியது என்றால் அது மிகையாகாது.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி
- https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/884269-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-12-5.html

அடுத்த பகுதி அக்டோபர் 21 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்படும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x