Published : 04 Oct 2022 06:34 AM
Last Updated : 04 Oct 2022 06:34 AM

மேற்படிப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கண்ணன் கோவிந்தராஜ்

மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது பலருக்கும் குழப்பம் இருக்கும். மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்க எந்தெந்த காரணிகளை அடிப்படையாக வைத்துக்கொள்ள வேண்டும்? மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்க முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய காரணி, எந்தத் துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது என்பதுதான். அத்துறையில் வேலைவாய்ப்பு எப்படி என்று முதன்மைப்படுத்தக் கூடாது. தேர்ந்தெடுத்த துறையில் ஆர்வமும் அதைப் படிப்பதற்கு திறமையும் தன்னம்பிக்கையும் உள்ளதா என்பதும் முக்கியம்.

அடுத்து, அந்தப் படிப்பை எங்கே படிக்கலாம் என்று யோசிக்கும்போது வளாக நேர்காணலுக்கு அதிக அளவில் நிறுவனங்கள் எந்தக் கல்லூரிக்கு வருகின்றன என்பதைப் பொறுத்து முடிவெடுக்கக் கூடாது, எந்தக் கல்லூரியில் குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அத்தேர்வு அமைய வேண்டும்.

எப்படிப் படிக்க வேண்டும்? - கல்லூரியில் பாடத்திட்டத்துக்கு அப்பால் அத்துறையில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். கணினி சாராத படிப்பில் இருந்தாலும், கணினி இயக்க மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லது. இன்றைய இணையதள உலகில், தேர்ந்தெடுத்த துறையில் புதியவற்றைக் கற்பதும் படிப்பு சாராத துறையில் அறிவை வளர்த்துக்கொள்வதும் எளிது. துறை சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் கல்லூரிக்கு வெளியே நடைபெற்றால், அவற்றில் பங்கு பெற்று துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்தப் படிப்பைப் படித்தாலும் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள கூடுதல் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன.

வேலை கிடைக்குமா? - உலகில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், திறமையானவர்களுக்குப் பஞ்சம் இருப்பதைக் காண முடியும். நன்றாகப் படித்து ஒரு துறையில் தேவையான திறமைகளை வளர்த்துக்கொண்டவர்களுக்கு மதிப்புக்குரிய வேலை உலகில் எங்காவது கிடைத்தே தீரும். மேலும், நல்ல தகுதியும் திறமையும் இருப்பவர்கள் தொழில்முனைவோராகக்கூட மாறலாம்.

விரும்பிப் படிப்பதா, வேலைக்காகப் படிப்பதா? - நான் பிளஸ் டூ படித்த காலத்தில் உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்று பரவலாகச் சொல்லப்பட்டது. பிளஸ் டூவுக்குப் பிறகு விலங்கியல் பிரிவில் நான் சேர்ந்தபோது, என் நண்பர்கள் பலர் உயிரித் தொழில்நுட்பப் பிரிவில் வேறு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்கள். இளங்கலைப் படிப்பை முடிக்கும் சமயத்தில், வேலைவாய்ப்பு குறைவு என்பதை என் நண்பர்கள் அறிந்துகொண்டனர். உடனே முதுகலையில் எம்.பி.ஏ., படித்து வேறு ஒரு வேலையைத் தேடிக்கொண்டார்கள். அன்று விலங்கியலை எடுத்து ஆர்வத்துடன் படித்த நான் உள்பட என்னுடைய ஐந்தாறு நண்பர்கள் மட்டுமே உயிரியல் துறையில் சிறந்த வேலையில் இருக்கிறோம். நாங்கள் அத்தனை பேரும் படித்தது உயிரியல்தான்; ஆனால், ஒவ்வொருவரும் படித்த நோக்கம் வேறு.

உண்மையான ஆர்வத்துடன் விரும்பிய துறையில் காலடி எடுத்து வைத்தவர்களே அந்தத் துறையில் சாதித்திருக்கிறார்கள். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றியிருக்கிறார்கள். புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார்கள். மாறாக, வேலைவாய்ப்புக்காகப் படித்தவர்கள் படித்து (நல்ல மதிப்பெண்களுடன்) பட்டம் மட்டுமே பெற்றிருக்கிறார்கள். நன்கு படித்தவர்கள் ஏதோ ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையைப் பெற்றிருப்பார்கள். ஒரு பட்டம் பெற வேண்டும் என்பதற்காகப் படித்தவர்கள், வேலை இல்லாமலோ அல்லது படிப்பிற்குச் சம்மந்தமில்லாத கிடைத்த வேலையைச் செய்துகொண்டோ இருப்பார்கள்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: merchikannan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x