Published : 05 Nov 2019 11:54 AM
Last Updated : 05 Nov 2019 11:54 AM

சேதி தெரியுமா?

தொகுப்பு: கனி

ஹரியாணா முதல்வர் பதவியேற்பு

அக்.27: ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கட்டார் பதவியேற்றார். துணை முதல்வராக ஜனநாயக் ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்றார். ஹரியாணாவில் பா.ஜ.க., ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமை நீதிபதி

அக்.29: உச்ச நீதிமன்றத்தின் 47-ம் தலைமை நீதிபதியாக ஷரத் அரவிந்த் போப்டே நியமிக்கப் பட்டுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிக்காலம் முடிவடைந்ததால் அடுத்த தலைமை நீதிபதியாக ஷரத் அரவிந்த் போப்டே நியமிக்கப் பட்டுள்ளார். நவம்பர் 18 அன்று அவர் பதவியேற்கிறார்.

குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்

அக்.31: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவருமான குருதாஸ் தாஸ்குப்தா (82) கொல்கத்தாவில் காலமானார். 14-ம் மக்களவை(2004), 15-ம் மக்களவையிலும் (2009) நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்டுள்ளார்.

லடாக்கின் முதல் துணைநிலை ஆளுநர்

அக். 31: லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராகத் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஆட்சியர் ராதாகிருஷ்ண மாத்துர் பதவியேற்றார்.

ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநர்

அக். 31: ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மூ பதவியேற்றார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஆட்சியரான இவர், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் கூடுதல் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியவர்.

டெல்லியில் சுகாதார அவசரநிலை

நவ.1: டெல்லியில் காற்றின் தரம் கடுமையாகக் குறைந்ததால், சுகாதார அவசர நிலையை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய குழு அறிவித்துள்ளது. டெல்லி - என்.சி.ஆர். பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கும் இந்தக் குழு தற்காலிகத் தடைவிதித்துள்ளது.

10,926 பேருக்கு ஒரு மருத்துவர்

நவ.1: இந்தியாவில் 10, 926 பேருக்கு ஒரு அரசு அலோபதி மருத்துவர் மட்டுமே இருப்பதாக மத்திய சுகாதாரப் புலனாய்வுப் பிரிவின் (CBHI) 2019 அறிக்கை தெரிவிக்கிறது. உலகச் சுகாதார மையம், ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

சந்திரயான் 2: ஆர்கான்-40 கண்டுபிடிப்பு

அக்.31: சந்திரயான் 2 ஆர்பிட்டர், நிலவின் புறவளி மண்டலத்தில் ‘ஆர்கான்-40’ என்ற ஓரிடத் தனிமத்தைக் கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 ஆர்பிட்டர் படம்பிடித்த நிலவின் பரப்பை இஸ்ரோ இதற்குமுன் வெளியிட்டது.

அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை

நவ.1: நாட்டில் 2011-12 முதல் 2017-18 வரையிலான ஆறு ஆண்டுகளில் 90 லட்சம் வேலை இழக்கப்பட்டிருப்பதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சம் வேலை வாய்ப்புகள் இழக்கப்படுவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதிகரிக்கப்போகும் தன்னாட்சிக் கல்லூரிகள்

அக்.30: தன்னாட்சிக் கல்லூரிகளை அதிகரிக்கப்போவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள 49,000 கல்லூரிகளில் 708 கல்லூரிகள் மட்டுமே தன்னாட்சியுடன் இயங்கி வருகின்றன. மேலும் 1000 கல்லூரிகளைத் தன்னாட்சிக் கல்லூரிகளாக மாற்ற பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x