Last Updated : 07 May, 2025 07:20 AM

1  

Published : 07 May 2025 07:20 AM
Last Updated : 07 May 2025 07:20 AM

வேலை கிடைக்கும் வரை 5/6/3 முறையைப் பின்பற்றுங்கள்!

பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருப்பவர்களில் பலரும் எதிர்பார்ப்பது வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ). கல்லூரிப் படிப்பு நிறைவடையும் முன்பாகவே கைவசம் ஒரு பணி உள்ளது என்பதற்கான உத்தரவாதத்தைத் தரும் வாய்ப்பு அது. ஆனால், பெரும்பாலானோர் வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. படிப்பு முடிந்த பிறகு விண்ணப்பித்துத்தான் வேலைக்குச் சென்றாக வேண்டும் என்கிற நிலை.

முக்கியமான காலக்கட்டம்: இந்த இடைப்பட்ட நிலை, அதாவது கல்லூரிப் படிப்பு முடிந்து பணிக்கான வாய்ப்பு கிடைக்கும் வரையிலான காலக்கட்டம் பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியது. உறுதியற்ற எதிர்காலம் என்பது அச்சத்தை ஏற்படுத்தக் கூடும். தன்னோடு ஒரே வகுப்பில் படித்தவர்களில் சிலருக்கு ஏற்கெனவே வளாக நேர்காணல் மூலமாக வேலை கிடைத்திருப்பது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம்.

ஆனால், இந்த இடைப்பட்ட காலக்கட்டம் முக்கியமானது. சொல்லப் போனால் அதை நீங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்பது உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக் கக்கூடும் என்றும் சொல்லலாம். “நிறைய நிறு வனங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது ஒரு வேலை கிடைக் கும்” என்றும், “இன்னுமா உனக்கு வேலை கிடைக்கவில்லை? பாவம்” என்றும் கூறி சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு மன அழுத்தத்தைத் தரலாம்.

உங்களைப் போல வளாக நேர்காணலில் பணி வாய்ப்பு கிடைக்காத சிலருக்கு இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கலாம். அது உங்களுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தலாம். நாம் பின்தங்கி விடுவோமோ அல்லது ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்கிற பதற்றம் ஏற்படலாம். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முதலில் திட்டமிட வேண்டும்.

என்ன செய்யலாம்? - உணவு, உறக்கம் போன்றவற்றுக்காகத் தினமும் 10 மணி நேரத்தை ஒதுக்கினால் மீதம் 14 மணி நேரம் உங்களிடம் இருக்கிறது. அதை நீங்கள் ‘5, 6, 3’ எனப் பிரித்துக்கொள்ளலாம். தினமும் 5 மணி நேரம் உங்களது தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

அதாவது வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் தொடர்புகள். அப்படிப்பட்டவர்களைத் தயக்கம் இல்லாமல் அணுக வேண்டும். அது நச்சரிப்பு என்கிற எல்லைக்கும் சென்றுவிடக் கூடாது, கவனமாக இருக்க வேண்டும். வாய்ப்பு இருக்கிற இடங்களுக்குத் தேடிச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம் எத்தகையது, அது உங்களுக்கு உகந்ததா என்பது குறித்துத் தெரிந்தவர்கள் மூலமாகவும் வலைதளங்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து, தினமும் 6 மணி நேரம் உங்கள் அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளத் திட்டமிட வேண்டும். நூலகங்களுக்குச் சென்று வாசிக்கலாம், தகவல்களைப் புரட்டிப் பார்க்கலாம். உங்களது சுய விவரங்களை (CV) நிறுவனங்களுக்கு அனுப்பும் போது, கல்லூரிக் காலம் முடிந்து ஒரு வருடத்துக்கும் மேல் எந்தப்பணியும் செய்யாமல் இருக்கிறீர்கள் என்றால், அதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்கிற கேள்வி கட்டாயம் ஆக்கப்படலாம். அந்த இடைப்பட்ட காலத்தில் எதுவும் செய்யாமல் இருந்தால், அது உங்கள் மீதான எதிர்மறை பிம்பத்தை உண்டாக்கலாம்.

எனவே, வேலைவாய்ப்புக்கு வலு சேர்க்கும் குறுகிய காலச் சான்றிதழ் படிப்பு ஏதேனும் ஒன்றில் சேரலாம். இப்படி இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றால், நிறுவனங்களின் பார்வையில் நன்மதிப்பு கிடைக்கும். தவிர பெரும்பாலும் படிப்பு முடிந்த கையோடு வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நிறுவனங்கள் முன்னுரிமை தருகின்றன. காரணம், கல்வியில் அவர்கள் ‘அப்டேட்’டாக இருப்பார்கள்.

எனவே, இடைப்பட்ட காலத்தில் பயனுள்ள ஏதாவது ஒரு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால், வேலை வாய்ப்பின்போது உங்க ளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படலாம். அல்லது அனுபவத்தைக் கூட்டும் ‘இன்டர்ன்ஷிப்’பில் (பணியிடப் பயிற்சி) இணையலாம்.

சரி, மீதமுள்ள 3 மணி நேரம்? அது உங்களுக்கே உங்களுக்கானது. விருப்பமான இசையைக் கேட்பது, விளையாடுவது, நண்பர்க ளோடு ஆக்கபூர்வமாகப் பொழுதைக் கழிப்பது ஆகியவற்றுக்காக இந்த நேரத்தைச் செல விடுங்கள். ஏனென்றால் தவிப்பையோ வெறு மையையோ அளிக்கக்கூடிய இந்த இடைப்பட்ட காலத்தில் மனதை வலிமைப்படுத்திக் கொள்வதும், உற்சாகப்படுத்திக் கொள்வதும் இன்றியமையாதது. கல்லூரிப் படிப்புக்கும் வேலைக்குச் செல்வதற்குமான இடைப்பட்ட காலத்தைப் இப்படிக் கழித்தால் கண்டிப்பாக உரிய பலன் கிடைக்கும்.

- aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x