

தமிழகத்தில் கட்டிட அனுமதி தொடர்பான மேல்முறையீடு அனைத்தும் தற்போது வரை காகித வடிவில் மட்டுமே தரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் வர்த்தகம் மறு சீரமைப்பு செயல் திட்டத்தின் கீழ், கட்டிட அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான முடிவுகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்யவும், அது குறித்த பிரச்சினைகளை தீர்க்கவும் ஒரு விரிவான மேல் முறையீடு மற்றும் தகறாறு தீர்வு நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு டிடிசிபி பரிந்துரைத்தது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கட்டிட அனுமதி அளிக்கும் அமைப்பின் முடிவுகளுக்கு எதிராக, தொழில்நுட்ப அடிப்படையிலான, காலவரையறைக்கு உட்பட்ட முறையில் மேல் முறையீடு செய்யும் வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் இணைய வழியில் ஒற்றைச்சாளர அமைப்பு உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த ஒருங்கிணைந்த இணையதளத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்ய, மேல்முறையீட்டின் நிலையை கண்காணிக்க, அதனை தீர்வு செய்ய, மேல்முறையீட்டு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.