Published : 02 Nov 2019 01:24 PM
Last Updated : 02 Nov 2019 01:24 PM

வீட்டை அலங்கரிக்கும் மூங்கில்

கட்டுரை படங்கள்: எல்.ரேணுகாதேவி

வீட்டில் பயன்படுத்தப்படும் ஞெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக மூங்கில் போன்றவற்றில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஞெகிழியின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில் பலர் ஞெகிழிக்கு மாற்றாக உள்ள பொருட்களைத் தேடி வாங்கத் தொடங்கியுள்ளனர். அவற்றில் மூங்கில் பொருட்களுக்கு முக்கிய இடமுண்டு. இவை எடை குறைவாகவும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் உள்ளன.

ஆற்றங்கரையின் அடையாளம்

சென்னை நகரில் மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வடபழனி, அடையாறு, வால்டாக்ஸ் சாலை, ஆழ்வார்போட்டை, கிழக்குக் கடற்கரை சாலை, சேத்துப்பட்டு, புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையை ஒட்டிய கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் ஆந்திரத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள்.

இவர்கள் நம் கண்ணெதிரிலேயே மூங்கில் குச்சிகள் குடைகளாக மாற்றுவதையும் பிரம்புகளைப் புத்தக அலமாரியாக மாற்று வதையும் நேரடியாகப் பார்க்கமுடியும். அதுமட்டுமல்லாது பிரம்பு நாற்காலி, ஊஞ்சல், சோபா செட், பூஜைக் கூடை, காய்கறிக் கூடை, பழக்கூடை, அழுக்குத் துணிகளைப் போட்டு வைக்கும் கூடைகள், மூங்கில் நாற்காலி, டீபாய் உள்ளிட்டப் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக இப்பகுதியில் இவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் சேத்துப்பட்டு ஆற்றங்கரையின் அடையாளங்களில் ஒன்றாகவே இம்மக்களின் கலைப் படைப்புகள் மாறிவிட்டன. கூவம் ஆற்றங்கரையில் இக்கலைஞர்கள் வசித்தாலும் இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் வசதிப்படைத்தவர்களின் வீடுகளை அலங்கரிக்கின்றன என்பது நகை முரண். அனைத்துத் தரப்பட்ட மக்களும் வாங்கும் விலையில் இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கடைகளைவிடக் விலை குறைவு

பத்து குடும்பங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். மூங்கில் பொருட்களைத் தயாரிப்பதுடன் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மர சோபா போன்ற பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். கடைகளில் விற்பனை செய்யப்படும் மூங்கில் பொருட்களைவிட இங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர் வாங்கிப் பொருள் சேதமடைந்துவிட்டாலும் ரசீது இல்லாமல் மறுவேலை செய்து தருகிறார்கள். பிரம்பால் செய்யப்பட்ட இருவர் அமரும் வகையில் உள்ள சோபா, இரண்டு நாற்காலி, டீபாய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் மதிப்பு ரூபாய் 15,000. அதேபோல் மூங்கில் நாற்காலிகள் 1,200 ரூபாய்க்கும், பல்வேறு வகையிலான கூடைகளின் விலை ரூ. 500-யில் இருந்து தொடங்குகிறது.

“எங்களின் மூலப் பொருள் மூங்கில், பிரம்புகள்தாம். அவற்றை அசாம், சென்னையில் பாரீஸ் போன்ற பகுதிகளிலிருந்து வாங்கிப் பொருட்களைத் தயாரிக்கிறோம். நாங்கள் விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் முழுவதுமாகக் கைகளாலேயே செய்யப்பட்டவை. இதனால் இந்தப் பொருட்கள் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும். அதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் நாங்கள் விற்பனை செய்வதைவிட இரண்டு மடங்கு கூடுதலான விலையில் உள்ளன” என்கிறார் இத்தொழிலில் முப்பது வருடங்களாக ஈடுபட்டுள்ள நாகராஜ்.

வாடிக்கையாளர்கள் கேட்கும் வடிவமைப்பிலும் மூங்கில், பிரம்புப் பொருட்களை இவர்கள் தயாரித்து கொடுக்கிறார்கள். அதேபோல் பழைய மூங்கில் அறைக்கலன்களின் பழுது நீக்கும் பணியையும் இவர்கள் செய்து தருகிறார்கள்.

மூங்கில் திரை

ஸ்பர்டாங் சாலைக்கு அடுத்தபடியாகப் புரசைவாக்கத்தில் உள்ள கந்தப்பா தெரு, மூங்கில் திரைக்குப் பிரபலமான இடமாகும். காற்றோட்டமான பால்கனியை விரும்புகிறவர்களுக்கு இந்த மூங்கில் திரைமறைப்புகள் பயன்தரும். அதேபோல் கல்யாண வீடுகளில் தேவைப்படும் சாப்பாட்டுக் கூடை, விசிறி, முறம், நோன்புக் கூடை உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மற்ற இடங்களில் ஒரு சதுர அடி மூங்கில் திரை ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இவர்கள் ரூ.60-க்கு விற்பனை செய்கிறார்கள். பச்சை, சிகப்பு போன்ற வண்ணங்களில் மூங்கில் திரைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. “இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 60 சதுர அடி உள்ள மூங்கில் திரை தயாரிக்க ஒரு நாள் தேவைப்படும்” என்கிறார் இத்தொழில் ஈடுபட்டுள்ள ஆனந்தன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x