Published : 12 Oct 2019 12:45 PM
Last Updated : 12 Oct 2019 12:45 PM

வீடு கட்டலாம் வாங்க 03: எம் சாண்ட்டில் கட்டிய வீடு

ஜீ.முருகன்

இன்றைய தொழில்நுட்பம் மனிதர்களை எவ்வளவு அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும் அவர்களிடம் மாறாத சில நம்பிக்கைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று, ஆற்று மணல். சிமெண்ட் கலவையில் மணல் கலந்து வீடு கட்டினால்தான் உறுதியாக இருக்குமென்று அவர்கள் நம்புகிறார்கள். அது எவ்வளவு விலையானாலும் வாங்கி முழு வீட்டையுமே கட்டுகிறார்கள். எம் சாண்ட் (தயாரிக்கப்படும் மணல்) கலந்தும் சிலர் கட்டுகிறார்கள். சிலர் சுவரை எம் சாண்டில் கட்டிவிட்டு ரூஃப் கான்கிரீட்டுக்கு மட்டும் மணல் பயன்படுத்துகிறார்கள். நான் முழு வீட்டையும் எம் சாண்டில்தான் கட்டினேன்.

மணலோ எம் சாண்டோ அவை கலவையில் என்ன வேலை செய்கின்றன? இரண்டு கற்களை இணைக்கவே இடையில் கலவையாகப் பயன்படுத்தப்படுகின்றன. கலவையில் வெறும் சிமெண்ட்டைப் பயன்படுத்தும்போது செட்டாக செட்டாக விரிசல் காணும் சாத்தியம் அதிகம். மேலும் செலவு கூடுதலாகும். இரண்டு கற்களை இணைக்க சிமெண்டின் ஒட்டும் வீரியம் முழு அளவு தேவையில்லை. எனவே, அதில் மணல் துகள்களைச் சேர்க்கும்போது அதன் வீரியம் தேவையான அளவுக்குக் குறைக்கப்படுகிறது. ஜல்லியும் கம்பியும் எப்படி கான்கிரீட்டுக்கு உறுதி சேர்க்கிறதோ அது போல மணலும் கலவைக்கு உறுதிசேர்க்கிறது. இது ஒரு ஊடகம், அவ்வளவுதான்.

மணலைவிடச் சிறந்த எம் சாண்ட்

மணல் துகள்கள் செய்யும் இதே வேலையைத்தான் எம் சாண்ட் துகள்கள் செய்கின்றன. பரிசோதனையில் மணலைவிட எம் சாண்டில் கட்டப்பட்ட கட்டிடம் உறுதியாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மணல் துகள்கள் சீரான உருளையாக இருப்பதால் கொடுக்கும் உறுதியைவிட, பாறையைச் செயற்கையாக உடைப்பதால் எம் சாண்ட் துகள்களில் ஏற்படும் சீரற்ற வடிவம் பிடிமானத்தை அதிகப்படுத்தி உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.
மணலில் அதிக அளவு மண் கலந்திருந்தால் கட்டுமானத்தின் உறுதி குறையும்.

மேலும் நாள்பட அது விரிசல் காணும் வாய்ப்பு அதிகம். காரணம் சிமெண்ட் உட்காரும் இடத்தில் அதே அளவு நிறை கொண்ட மண் துகள்கள் போய் உட்கார்வதுதான். இதே பிரச்சினை எம் சாண்டிலும் இருக்கிறது. எம் சாண்டில் கலந்திருக்கும் மாவின் அளவு கூடும்போது உறுதித்தன்மை குறைந்து நாளாக நாளாக சுவர்கள் விரிசல்விடத் தொடங்கும். அதனால்தான் எம் சாண்ட் தொழிற்சாலைகளில் தண்ணீர் விட்டு அலசி விநியோகம் செய்கிறார்கள்.

எம் சாண்டைக் கையாளும் நுட்பம்

ஜல்லி தொழிற்சாலைகளில் ஒதுங்கும் மாவை சிலர் எம் சாண்டில் கலந்து விற்பனை செய்கிறார்கள் என்பதால் அதன் தரத்தைப் பார்த்து வாங்குவது நல்லது. சுவர் கட்டப் பயன்படும் எம் சாண்ட் 4mm அளவு கொண்டது. சுவர் பூசுவதற்குப் பயன்படும் பி சாண்ட் 2mm அளவு கொண்டது. 6mm அளவு கொண்ட எம் சாண்ட்டை ரூஃப் கான்கிரீட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

மணல் கலந்த கலவையிலேயே வீடு கட்டிப் பழக்கப்பட்ட நம் மேஸ்திரிகள் 4mm எம் சாண்டைப் பயன்படுத்தச் சுணக்கம் காண்பிப்பார்கள். காரணம் கலவை கையைக் கிழிக்கும் அளவுக்கு இருப்பதுதான். அவர்களுக்குக் கையுறை வாங்கிக் கொடுத்து பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். இதிலேயே அதிக மாவு கலந்த தரமற்ற எம் சாண்டைப் பயன்படுத்த சில மேஸ்திரிகள் விரும்புவார்கள். ஆனால், அதனால் சுவரின் உறுதி பாதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x