டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற என்ன வழி?

டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற என்ன வழி?
Updated on
1 min read

எனக்குக் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் பஞ்சாயத்து அனுமதி பெற்ற வீட்டுமனை உள்ளது. அதற்கு நான் தனியாக டி.டி.சி.பி. அங்கீகாரம் வாங்க முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? - எஸ்.சிவக்குமார், சென்னை - 78

இதற்குச் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜெ. சுந்தர் பதிலளிக்கிறார்.

நிச்சயமாக அங்கீகாரம் வாங்க முடியும். உங்கள் வீட்டு மனைக்கு உண்டான வில்லங்கச் சான்றிதழ், பட்டா நகல், உங்கள் பெயரிலான தாய்ப்பத்திரம் நகல், நீங்கள் வாங்கிய மனைக்கு உண்டான வரைபட அங்கீகார நகல், சிட்டா, அடங்கல் நகல்கள், புகைப்படம் வைத்து நகர ஊரமைப்பு இயக்ககத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குக் கட்டணம் உண்டு. முறையாக விண்ணப்பித்த பிறகு குறிப்பிட்ட நாட்களுக்குள் டி.டி.சி.பி. அங்கீகாரம் கிடைத்துவிடும். நீங்கள் மனைக்கு டி.டி.சி.பி. கேட்டு விண்ணப்பிப்பதற்குப் பதில், வீடு கட்டுவதற்கான திட்ட வரைபடத்தை மொத்தமாக வைத்து அங்கீகாரம் கேட்பது நல்லது. தனித்தனியாக அங்கீகாரம் வாங்க ஆகும் அலைச்சலைத் தவிர்க்கலாம்.

பொதுவாக விலை குறைவாக இருப்பதால் பலரும் பஞ்சாயத்து அனுமதி பெற்ற வீட்டுமனைகளை வாங்கி விடுகின்றனர். டி.டி.சி.பி. அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கினால் அதற்காக நாம்தான் அலைய வேண்டியிருக்கும். மேலும் பணமும் கூடுதலாகச் செலவாக வாய்ப்புண்டு.

எனவே வாங்கும் போதே டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனைகளா என்பதைப் பார்த்து வாங்கவும். மனை விற்பவர்கள் உங்களிடம் காட்டும் திட்ட வரைபடத்தில் அங்கீகார எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணை வைத்து மனையின் நம்பகத் தன்மையை அறிந்துகொள்ளலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in