

இன்றைக்குக் கூட்டுக்குடும்ப முறை என்பது மெல்ல வழக்கொழிந்து அதனிடத்தைத் தனிக் குடும்ப முறை ஆக்ரமிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் ஓர் அம்சகமாக இன்றைய காலட்டத்தில் வீடு கட்டும் அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கான ஒரு பிரத்யேக அறையை அமைக்க விரும்புகின்றனர்.
அவ்வறையும் நவீனமாக, குழந்தைகள் விரும்பும் அனைத்து வசதிகளையும் கொண்ட கவர்ச்சிகரமான அறையாக அமைக்க விரும்புகின்றனர். குழந்தைகளுக்கான அறையை வடிவமைப்பது என்பது சவாலான விஷயம்தான். ஏனென்றால் குழந்தைகளின் ரசனை, தேவை போன்றவை மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் வடிவமைப்பதில் சிறிது எச்சரிக்கை தேவை. பின்னாளையும் மனதில் கொண்டு வடிவமைத்தல் நலம்.
புத்துணர்வளிக்கும் வண்ணங்கள்
குழந்தைகளுக்குப் பளீரென்ற வண்ணங்கள் மிகவும் பிடிக்கும். என்றாலும் பிறந்த குழந்தைகளுக்கான அறை என்றால் ரோஜா வண்ணம் அல்லது வெளிர் நீலம் கொண்டு அமைப்பார்கள். குழந்தைகள் வளர வளர அதற்கேற்ப வண்ணங்களையும் மாற்ற வேண்டியதிருக்கும். சுவர்களுக்குப் பொதுவான பளிச்சிடும் வண்ணமிடுவர்.
ஏனென்றால் குழந்தைகளைப் புத்துணரச்சியுடனும், ஆற்றலுடனும் இருக்க இந்த வண்ணம் பெரிதும் உதவும். மேலும் எளிதில் சுத்தம் செய்யக் கூடிய வகையிலான பெயிண்ட்களையே உபயோகிக்க வேண்டும். குழந்தைகள் சுவரில் கிறுக்கினாலோ, அழுக்கு கைகளில் அவற்றைப் பாழ்படுத்தினாலோ அதனை எளிதில் சுத்தம் செய்து விடலாம்.
மேஜையும் விளக்கும்
குழந்தைகள் அறையில் பயன்படுத்தப்படும் மேஜைகள் கூர் ஓரப் பகுதிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை குழந்தைகள் ஓடியாடி விளையாடும்போது காயப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு உண்டு. பலர் அடுக்குப் படுக்கை அமைக்கின்றனர். இதன் நோக்கம் குறைந்த இடத்தில் இருவர் தூங்கலாம். அதில் விளையாடுவதைக் குழந்தைகளும் விரும்புவர். அறையின் ஓரத்தில் படிப்பதற்கோ வண்ணம் தீட்டுவதற்கோ மேஜை ஒன்றை அமைக்கலாம். இப்பொழுதெல்லாம் கணிப்பொறி இல்லாத வீடு ஏது? அதற்கும் வசதியான மேஜை மற்றும் நாற்காலி அமைக்கலாம். புத்தகம் படிப்பதற்கு ஏற்ற வகையில் மேஜையிலும் படுக்கையிலும் விளக்கு அமைக்கலாம்.
குழந்தைகளுக்குப் பிடித்த சுவர் ஓவியம்
குழந்தையின் வயது என்னவாகவும் இருக்கட்டும், அந்தந்த வயதிற்கேற்ப அவர்களுக்கு உடைகள், பொம்மைகள், புத்தகங்கள், செருப்புகள்,பேனா, பென்சில் மற்றும் வண்ணம் தீட்ட தூரிகைகள் என்று அவர்களுக்கு எத்தனையோ தேவைகள் இருக்கும். இவை அனைத்தையும் சேமிக்கும் விதமாக கேபினட்கள் மற்றும் டிராக்கள் அமைக்க வேண்டும்.
எளிதில் சுத்தம் செய்யக்கூடிய அதிகம் வழுக்காத தரையையே குழந்தைகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். தண்ணீர் அல்லது வேறு பொருட்கள் சிந்தி, அதனால் குழந்தைகள் வழுக்கி விழும் அபாயம் தடுக்கப்பட வேண்டும். தரை விரிப்புகளினாலும் அதே ஆபத்து இருப்பதால் அவற்றைத் தவிர்க்கலாம்.
குழந்தைகள் அறையை வடிவமைப்பதில் இப்போது புதிய எல்லைகளைத் தொட்டுவிட்டனர். பார்பி, டோரா, டார்சான், கார்கள்,மிக்கி மௌஸ் என்று எண்ணற்ற வகையில் சித்திரம் தீட்டி அறையை அலங்கரிக்கின்றனர். இவை வேண்டாமெனில் குழந்தைகளுக்குப் பிடித்த ஓவியம் அல்லது அவர்களே வரைந்தது அல்லது அவர்களுக்குப் பிடித்த பிரபலத்தின் புகைப்படம் போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்கலாம்.
குழந்தைகள் தாங்கள் பெற்ற பரிசுகள், நினைவில் கொள்ள வேண்டிய செயல்கள் போன்றனவற்றை எழுதி வைக்க ஒரு தகவல் பலகை அமைக்கலாம். வரைந்து மகிழ கரும் பலகை அமைக்கலாம்.
திரைப்படங்கள் பார்க்க விரும்பும் குழந்தைகள் எனில் டிவியும் ஹோம் தியேட்டரும் அமைத்துத் தரலாம். அழகிய திரைச்சீலைகள் இட்டு அறையின் அழகைத் கூட்டலாம். நண்பர்களுடன் இணைந்து விளையாடும் வண்ணம் அறையை விசாலமாக அமைக்க வேண்டும். இடமிருந்தால் அறையினுள் சிறிய ஊஞ்சலை மாட்டலாம்.
கூரையில் விண்வெளி போல அமைக்கலாம். அறையின் அருகிலேயே குளியலறை அமைத்தால் பள்ளிக்குக் கிளம்புவதற்கு எளிதாக இருக்கும். அறையின் அருகில் பால்கனி இருந்தால் அவற்றின் மீது அவர்கள் ஏறா வண்ணம் தடுப்புகள் அமைத்திட வேண்டும்.
வாழ் நாள் சேமிப்பு முழுவதுமாய் குழந்தைகள் நலனுக்கு அர்ப்பணிக்கும் நாம் அவர்களின் அறையை ஆடம்பரமாய் வடிவமைப்பதில் ஆச்சர்யமில்லை. என்றாலும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை அமைத்துத் தரும் வகையில் அமைக்க வேண்டும்.
ஒரு சிறிய மேஜையைப் பரிசளித்தாலே ஆனந்தப்படும் குழந்தைகள் அவர்களுக்கென தனியறை, அதுவும் பிரத்யேகமாக வடிவமைத்து, தந்தால் மிகவும் ஆனந்தப்படுவார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது தங்கள் இளமைப்பிராயத்தை நினைவு கொள்ளும் போது தங்களின் அழகிய அறையை நினைத்துப் பெருமைப் படுவதும் ஆனந்தம் தானே! அமைத்த உங்களுக்கும் பெருமைதானே!