

செ
ன்ற வாரத்தில் கொடுக்கப்பட்ட முறையின்படி மின்வாரிய இணையதளத்தில் கணக்கைத் தொடங்கிய பிறகு, அந்த தளத்துக்குச் சென்றால் முதலில் உங்கள் பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் 9 (பிராந்திய) பகுதியைக் கொண்டிருக்கும் அதில் உங்கள் பிராந்தியத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். (தமிழக மின்வாரியம் தமிழகத்தை 9 மின் வாரிய பிராந்தியங்களாகப் பிரித்துள்ளது.)
நமது வீடு எந்த பிராந்தியத்தி்ல் வருகிறது என்று தெரியாதே? என்றால் கவலைப்படாதீர்கள். ஏற்கெனவே நீங்கள் கட்டியுள்ள மின்கட்டண ரசீதில் உங்கள் பகுதி எண் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு உங்கள் மின்கட்டண ரசீதில் மின்கட்டண எண் 05139005193 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால் இந்த எண்ணை நீங்கள் நான்கு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். முதல் இரண்டு எண்கள் உங்கள் பிராந்திய எண், அதாவது மேலே குறிப்பிட்டுள்ள எண்ணில் 05 என்பது மதுரை பிராந்திய எண்.
இரண்டாவதாக உள்ள மூன்று எண்கள் உங்கள் ஊரின் எண் (செக்சன் எண் என்பார்கள்). அடுத்த மூன்று எண்கள் ஊரின் பகுதி எண். உதாரணத்துக்கு 139 என்பது ஊரின் எண் என்றால், அதற்கு அடுத்த மூன்று எண்கள் அந்த ஊரை மூன்றாகவோ நான்காகவோ பிரித்து அளிக்கப்பட்ட எண். இவை ஒற்றை இலக்கத்திலிருந்தாலும் அவை மூன்றெழுத்து எண்ணாகத்தான் எழுதப்பட வேண்டும். உதாரணத்துக்கு 5 என்பதை 005 என்று எழுதப்பட வேண்டும். கடைசியாக உள்ள எண்கள்தான் நமது வீட்டின் மின்இணைப்பு எண். அவை ஒற்றை இலக்கத்திலிருந்து நான்கு இலக்க எண்கள் வரை இருக்கலாம். இந்த எண்ணை அப்படியேக் குறிப்பிடலாம். அதற்கு முன் 0 குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக 5 என்றால் 0005 என்று குறிப்பிடாமல் வெறுமனே 5 என்றே குறிப்பிடலாம்.
பிராந்திய எண்ணுக்கு உரிய பிராந்தியத்தின் பெயர்கள்,
01 சென்னை - வடக்கு
02 விழுப்புரம்
03 கோயம்பத்துார்
04 ஈரோடு
05 மதுரை
06 திருச்சி
07 திருநெல்வேலி
08 வேலுார்
09 சென்னை – தெற்கு
நமது மின் இணைப்பு எண்ணைப் பதிவுசெய்த பிறகு நம் மின் இணைப்புக்கான கட்டணம் காண்பிக்கப்படும். அதைத் தொட்டு இணையம் மூலம் கட்டணம் செலுத்தலாம். ஒருவரே கூடுதலாகவும் மின் இணைப்பைப் பதிவுசெய்துகொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது. பிறகு அடுத்த கட்டத்தில் நமது மொபைல் எண்ணைப் பதிவுசெய்யவும். கடைசிக் கட்டத்தில் ஏற்கெனவே மேலே குறிப்பிட்டவாறு நமது எண்ணில் முதல் இரண்டு இலக்கம் போக மீதமுள்ள எண்களை உள்ளீடு செய்யவும். பிறகு கீழே உள்ள Validate என்பதை அழுத்தினால் நமது மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் வரும்.
இதில் ஏற்கெனவே இந்த எண் பதிவுசெய்யப்பட்டுவிட்டது என்ற தகவல் வந்தால் தங்களது மொபைல் எண்ணோ மின்கட்டண எண்ணோ வேறு ஒரு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பொருள். ஒரு வீட்டில் நீங்கள் குடியிருக்கிறீர்கள் என்றால் உங்கள் வீட்டின் உரிமையாளர்கூட உங்களது மின்கட்டண எண்ணை அவரது மொபைல் எண்ணுடன் இணைத்திருக்கலாம். உங்களது சொந்த வீட்டுக்கு இதுவரை பதிவுசெய்யவில்லை ஆனாலும் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வந்தால், நேரடியாக உங்கள் பகுதி மின்சார வாரியத்தின் அலுவலர்களிடமோ உதவி பொறியாளரிடமோ நேரடியாக விண்ணப்பித்து உங்களது எண்ணைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
இதனால் கூடுதலான நன்மை என்னவென்றால், நமது பகுதியில் மாதம் ஒரு முறை மின்சார வாரியத்தின் பராமரிப்புக்கென பகலில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 அல்லது 4 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படும். சில சமயம் இந்தச் செய்தி நமக்குத் தெரியாமல் பல வேலைகளை முடிக்க முடியாமல் சிரமப்பட்டிருப்போம். சொந்த அலுவலகம் வைத்திருப்போர் மின்சாரம் முழு நாளைக்கும் இல்லையென்றால் விடுப்பு அளித்திருப்பார்கள். முதலிலேயே தெரியாததால் பணியாளர்கள் வந்தபின் மின்சாரம் இல்லையென்று தெரிந்த பின்பு விடுப்பும் விட முடியாமல், வேலையும் வாங்க முடியாமல் சிரமப்பட்டிருப்பார்கள்.
வீட்டில் ஏதாவது விசேஷம் வைத்திருப்போம், அந்நாள் முழுவதும் மின்தடையென்றால் மிகவும் சிரமம். (இன்வெர்ட்டர் இரண்டு மணிநேரத்துக்குதான் இருக்கும்) ஏற்கெனவே மின்தடை ஏற்படுவது தெரிந்திருந்தால் இந்த சிரமங்களை நாமே தவிர்த்திருக்கலாம். நாம் நமது இல்லத்தின் மின் இணைப்பு எண்ணுடன் நமது மொபைலுடன் இணைத்தால் நமது பகுதியில் மின்தடை ஏற்படுவது தொடர்பான குறுஞ்செய்தியை முதல் நாளிலோ அல்லது அதற்கு முன்போ அனுப்பிவிடுவார்கள். இந்த செய்தி பெருமளவில் நமது சிரமத்தை குறைக்க உதவும் என்பதற்கு மட்டும் கூட நமது மொபைல் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம்.