

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எங்கள் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். வாக்குப்பதிவு மையத்துக்குச் சென்றபோது, நான்கு மகன்களைப் பெற்ற வயதான ஒருவர் வாக்களிக்கச் செல்லும் தன் மருமகள்களை அழைத்துக் காதில் ஏதோ சொன்னார். ஒரு மருமகளிடம் மட்டும், ‘சொன்னது ஞாபகம் இருக்கட்டும்’ என்றார். மாமியார் சொன்ன ரகசியம் என்ன என்று மருமகளிடமே கேட்டேன். குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சொல்லி அக்கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறியதாகச் சொன்னார். வாக்குரிமையின் நிலை இதுதானா?
உலக நாடுகளில் வாக்குரிமைக்காகப் பெண்கள் போராடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் மதறாஸ் மாகாணத்தில் 1921ஆம் ஆண்டு பெண்கள் வாக்களிக்கலாம் எனச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சொத்துரிமை அடிப்படையிலேயே வாக்குரிமை வழங்கப்பட்டது. விடுதலைக்குப் பின் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்கள் வாக்களித்தனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் வாக்களிக்கத் தகுதிபெற்ற பெண்களின் எண்ணிக்கையும் ஒரு முக்கியமான காரணமாகும்.