

நலம் விரும்பி ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு ஒரு மகள், ஒரு மகன். இருவருக்கும் திருமணம் முடித்து பேரன் பேத்தியும் பிறந்துவிட்டார்கள். தூரத்து நகரமொன்றில் அவர்கள் இருக்கிறார்கள். வந்தவர், “எனக்கு ஒரு கேள்வி. என் மகளை நான்கு டிகிரி படிக்க வைத்தேன். தைரியமான பெண்ணாக வளர்த்தேன்.
இப்போது அவள் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி வீட்டில் இருக்கிறாள். வேலைக்குச் செல்லவில்லை. என் மகள் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. அது ஏன் என்று புரியவில்லை?” என்றார் கவலையோடு.
“என் மருமகளும் நன்கு படித்தவள்; வேலைக்குச் செல்கிறாள். அவளுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால், அவள் வேலைக்குச் சென்று வந்துவிட்டு, வீட்டில் உள்ள வேலைகளையும் பார்க்கிறாள்” என்று கூடுதலாகச் சொன்னார்.
செலவு செய்து பெரிய கல்வி நிறுவனங்களில் குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது பெற்றோரின் கெளரவத்தின் குறியீடாகக் கருத இடம் இருக்கும்போது, பிள்ளைகளின் எதிர்காலத்தையும் அது கருத்தில் கொள்கிறது. அதைத் தாண்டி பிள்ளைகளின் கல்வி, பெற்றோரின் முதலீடாகவும் இப்போது மாறியிருக்கிறது. ஏனெனில் பெற்றோர் வருமானத்தின் பெரும்பகுதி பிள்ளைகளின் கல்விக்கானதாக மாறியிருப்பதில் மறுப்பேதும் சொல்வதற் கில்லை.