

என்னுடைய பத்து வயதில் என் அண்ணன் ஆனந்த விகடன், குமுதம் வார இதழ்களை வாங்கிப் படித்தபோது நானும் அவற்றைப் படிக்கத் தொடங்கினேன். வார இதழ்களில் இடம்பெற்ற சுஜாதாவின் தொடர்கதைகளையும் பின்னர் அவருடைய நாவல்களையும் வாசித்தேன். ‘கணையாழி’யின் கடைசிப் பக்கக் கட்டுரைகள் முதல் பக்தி இலக்கியங்களில் அவருக்கு இருந்த ஈடுபாடும் அனைத்துத் துறைகளிலும் அவர் கொண்டிருந்த செறிவான அறிவும் என்னை வியப்பில் ஆழ்த்தின.
சுஜாதா தன் அறிவியல் கதைகள், கட்டுரைகள் மூலம் தமிழ் வாசகர்களைப் புதியதொரு உலகத்தைப் பார்க்கவைத்தார். கணேஷ் - வசந்த் துப்பறியும் கதைகளில் இருந்த திருப்பமும் நகைச்சுவையும் ரசிக்க வைத்தன. கணினித் துறையில் அவரது அறிவு நம்மையும் கணினி கற்றுக்கொள்ளத் தூண்டியது. அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள் அனைத்தும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த பெரும் பேறுதான்.