

நான் மயிலாடுதுறையில் பிறந்து, தருமபுரம் ஆதீனத் தமிழ்க் கல்லூரியில் பயின்று, ஆசிரியர் பயிற்சி முடித்து, கடலூரில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணியில் இருந்தபோது தினமும் நாளிதழ்களை வாசித்துப் பெண்ணியம், வேலைவாய்ப்பு, சமூகச் சிந்தனை, சாதனையாளர்கள், அறிவியல், விளையாட்டு ஆகிய தலைப்பிலான செய்திகளைத் தொகுத்து மாணவியருக்குச் சொல்லத் தவறியதில்லை. இது அவர்களின் பொது அறிவை வளர்க்கவும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும் உதவும் என்று நம்பினேன்.
ஒருநாள் பத்தாம் வகுப்பு மாணவியரிடம், ‘சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் என்ன வேறுபாடு? மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் என்ன வேறுபாடு?’ என்று கேட்டேன். கேட்ட பிறகுதான் எனக்கே தெளிவான பதில் தெரியவில்லை எனத் தெரிந்தது. ‘நாளைக்குப் பதில் சொல்கிறேன்; பாடத்தைப் பார்ப்போம்’ என்று சமாளித்துவிட்டேன்.