

நாங்கள் வசிக்கும் காரைக்குடியில் பெரும்பாலான நாள்கள் வெயிலாகத்தான் இருக்கும். அதனால், கன்னியாகுமரிக்கும் கேரளத்தின் ஆலப்புழைக்கும் செல்லத் திட்டமிட்டுப் புறப்பட்டோம். நாங்கள் போனபோது லேசான மழைத்தூறல் இருந்ததால் சூரிய உதயத்தைப் பார்க்க முடியவில்லை. பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று திரும்புகையில் வானுயர்ந்த குமரி திருவள்ளுவர் சிலையைக் கண்டதும் தமிழராகப் பிறந்ததன் பெருமையைப் பெற்றேன். அந்தப் பெருமையோடு நடந்து சென்றபோது முக்கடல் சங்கமம் வந்துவிட்டது. மூன்று கடல்களின் தண்ணீரும் வேறு வேறு நிறத்தில் இருக்கும் அறிவியலின் அதிசயம் நம்மை வியக்க வைக்கும்.
விவேகானந்தர் பாறைக்குப் படகில் சென்றோம். நாங்கள் சென்றபோது கண்ணாடிப் பாலம் அமைத்திருக்கவில்லை. அதற்காகவே மீண்டும் செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். பாறையின் மீது அடிக்கும் அலையின் துளிகள் நம் மேல் விழுந்தபோது எழுந்த பரவசத்தோடு மாலையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டு, சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குச் சென்று அந்த நாளை முடித்தோம்.