

வாழ்க்கையில் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டபோதும் சோர்ந்துபோகாமல் மனத்தெளிவோடு சிந்தித்தால் புதிய வாசல்கள் திறக்கும் என நிரூபிக்கிறார் லெட்சுமி கீர்த்திகா. தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவைச் சேர்ந்தவர் இவர், பல விதமான மெழுகுவத்திகளைத் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்துவருகிறார்.
கணினி அறிவியல் பட்டதாரியான லெட்சுமி கீர்த்திகா, தன் கணவர் வீரகண்ணனுடன் கணினித் துறை சார்ந்த பணியைச் செய்துவந்தார். 2021இல் கரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி பலரது வேலைவாய்ப்பைப் பறித்தது. அப்போது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுள் லெட்சுமி கீர்த்திகாவும் ஒருவர். வீட்டில் முடங்கியிருந்தால் விடியல் பிறக்காது எனச் சிந்தித்தவர், மெழுகுவத்தி தயாரித்து விற்கலாம் என நினைத்தார்.