

நிறையப் பெண்களுக்குத் தன்னம் பிக்கை இல்லாதது மட்டுமல்ல; ஒரு தயக்கமும் இருக்கிறது. ‘என்னால் இது முடியுமா’, ‘என்ன இருந்தாலும் நான் ஒரு பெண் அல்லவா?’ என்று பயந்து எதற்கும் முயல்வதே இல்லை. தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையின்மை, தயக்கம், வேண்டாத மூளைச்சலவை இவை எல்லாமே சேர்ந்து படித்தவர் - படிக்காதவர், கிராமம் - நகரம் என்கிற வேறுபாடின்றிப் பல பெண்களைப் பின்னோக்கி இழுக்கிறது.
தோல்வியைச் சந்திக்க பலரது மனதில் பலம் இல்லை. மாங்காய் வேண்டுமென்றால் கல்லை எடுத்துக் குறிபார்த்து அடிக்க வேண்டும். மாங்காய் விழுந்தால் மகிழ்ச்சி. ஆனால், மாங்காய் விழாமல் போய்விட்டால் என்ன செய்வது என்கிற தயக்கத்தில் பலர் கல்லெறிவதே இல்லை. முயற்சியே எடுக்க மாட்டார்கள். கூடாது, முடியாது, நடக்காது என்று ஏதாவது எதிர்மறையான பதில் வந்துவிட்டால் தன்னுடைய உழைப்பு தோல்வியடைந்துவிடுமே என்கிற பயத்திலேயே பலர் எதற்கும் முயற்சி செய்யாமல் இருக்கிறார்கள்.