

சிறு வயதில் நாங்கள் வசித்தது திருவாரூர். எங்கள் பாட்டி 20 கி.மீ தள்ளி மடப்புரத்தில் வசித்தார். எல்லாப் பிள்ளைகளைப் போலவே நாங்களும் கோடை விடுமுறை தொடங்கியதும் பாட்டி வீட்டுக்குக் புறப்பட்டுவிடுவோம். எங்கள் அம்மாவழித் தாத்தா பிரபல வக்கீல். மிகப்பெரிய வீடு. வாசலில் பெரிய பந்தல். படிகள் ஏறினால் கம்பி மறைவோடு கூடிய திண்ணை. வழக்கு தொடர்பாகப் பேச வருபவர்கள் உட்கார்ந்து பேச ஆறேழு நாற்காலிகள்.
காலை உணவு பெரும்பாலும் தாத்தாவோடுதான். பெரியம்மா, சித்தி பிள்ளைகளோடு சிரித்துப் பேசி சாப்பிட்டுவிட்டு தாயம், பல்லாங்குழி விளையாடுவோம். பிறகு கொல்லையில் இருக்கும் பெரிய கிணற்றுக்குச் செல்வோம். மர நிழலில் அமைந்திருக்கும் அந்தக் கிணற்றில் தண்ணீர் எப்போதும் சில்லென்று இருக்கும். அங்கிருக்கும் குளியல் தொட்டியில் ஆட்டம் போடுவோம்.