

வாகனத்தின் ஜன்னலோரம் அமர்ந்து பகல் பொழுதில் கடந்து செல்லும் ஊர்களையும் மக்களையும் அவர்களது வாழ்க்கையையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்துக்கொண்டே செல்வது சுகமான அனுபவம். அப்படித்தான் இந்தக் கோடை விடுமுறைக்கு கன்னியாகுமரி சென்றோம். அங்கு மக்களின் பேச்சு, உணவு, பழகுமுறைகளைப் பார்த்து ரசித்தோம். ஒளிப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த திருவள்ளுவர் சிலையை நேரில் கண்டு பிரமித்தபோதுதான் அதன் உண்மை உயர்வை உணர முடிந்தது.
விவேகானந்தர் கடலில் நீந்திச் சென்று பாறையில் அமர்ந்து தவமிருந்த இடம் என்பதை நினைக்கும்போதே விவேகானந்தர் நினைவு இல்லத்தில் இருந்த எங்களுக்குச் சிலிர்த்தது. தியானம் தெரியாவிட்டாலும் கண்களை மூடி அமர்ந்திருந்தபோது நிஜமாகவே மனதில் அமைதி சூழ்ந்தது, ஆனந்தமானது.