

ஓடி ஓடி வேலை செய்து களைத்திருக்கும் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது சுற்றுலா. அதிலும் சித்த மருத்துவக் கல்லூரித் தோழிகளான நாங்கள் 25 ஆண்டுகள் கழித்துச் சந்தித்ததோடு கோவை ஆனைக்கட்டிக்குச் சுற்றுலா சென்றது மறக்க முடியாத அனுபவம். பல ஊர்களில் இருந்தும் தோழிகள் அனைவரும் வந்ததும் பேசிக் களித்ததும் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை.
ஆனைக்கட்டியில் நல்ல தங்குமிடம், போக்குவரத்து என அனைத்தையும் பெண்களே ஒருங்கிணைத்ததும் யாருடைய துணையும் இன்றித் தனியே வந்து சென்றதும் தன்னம்பிக்கையை அதிகரித்தது. ஆடல், பாடல், நீச்சல் எனப் புதிய உலகுக்குச் சென்று வந்தோம். தோழிகள் அனைவரும் மாறி மாறிப் பரிசுகளையும் இனிப்புகளையும் கொடுத்து, அன்பான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம்.
இரண்டு நாள்களே இருந்தாலும் வழக்கமான சமையல், இதரக் குடும்பப் பொறுப்புகள், பணிகள் என அனைத்தையும் விட்டுவிட்டு நாங்கள் அனைவரும் கல்லூரி வாழ்க்கைக்குச் சென்று திரும்பியதைப் போலப் புத்துணர்வாக உணர்ந்தோம். குடும்பத்துடன் செல்வது ஒரு சுகமென்றால் பள்ளி - கல்லூரித் தோழர்களோடு சுற்றுலா செல்வது இனிய அனுபவம்.
- சோலை தேவசேனா.