

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ‘நான் விரும்பும் இலக்கியம்’ என்கிற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. திருக்குறளைத் தேர்வுசெய்து பேசலாம் என்று நினைத்தபோது அப்பா, ‘பெண்ணியம் பேசும் சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பெண்கள் பள்ளியில் பேசினால் சிறப்பாக இருக்கும்’ என்றார்.
அவரின் வழிகாட்டுதலில், ‘மண் பார்த்து நடப்பவளே பெண் என்கிற கோட்பாட்டை மாற்றி விண் முட்டும் அரண்மனையையும் அதிகாரத்தின் உச்சம் தொட்ட மன்னனையும் சுட்டெரிக்கும் வல்லமை மிக்கவள் பெண் என்பதை உணர்த்தியதோடு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவையே பெண்ணின் அணிகலன்கள் என்கிற கற்பிதங்களைத் தகர்த்து, அச்சத்தைத் துறந்து ஆவேசமும் கொள்ள உரிமை மிக்கவள் பெண் என்பதை உணர்த்திய இலக்கியம் சிலப்பதிகாரம்’ என்று மேடையில் முழங்கியபோது எழுந்த கரவொலி அடுத்தடுத்த போட்டிகளின் பங்கெடுப்புக்கு அடித்தளம் இட்டது.
அப்பா முற்போக்குக் கருத்தியலை முன்மொழியும் நூல்களை அதிகமாக வாசிப்பார். நானும் அவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அக்கருத்தியலை மையமாகக் கொண்டு பேசி, தொடர்ந்து மாவட்டம், மாநில அளவிலான பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றேன். ஆனால், கல்லூரிக் காலத்துக்குப் பிறகு மேடையேறிப் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.