

வேலூர் மாவட்டத்தில் பில்லாந்திப்பட்டு என்கிற சிறிய கிராமத்தில் பெண்களால் தயாரிக்கப்படும் குழந்தைகள், பெண்களுக்கான பருத்தி கைத்தறி ஆடைகள் லண்டனிலும் பாரிஸிலும் விற்பனையாகின்றன.
கிராமத்தில் இருந்தபடி இந்த அசாத்திய முயற்சியைச் சாத்தியமாக்கியவர் 32 வயதான பொறியியல் பட்டதாரியான பொன்னெழில் பவதாரிணி. ‘ஹேண்ட்லூம்ஸ் ஹட்’ என்கிற இவரது நிறுவனம் ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய்வரை வருவாய் ஈட்டி வருகிறது!
காட்பாடியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள பில்லாந்திப்பட்டு கிராமம்தான் பொன்னெழில் பவதாரிணியின் சொந்த ஊர். அப்பா சசிவண்ண மாறன், அம்மா சாந்தி அரசுப் பள்ளி ஆசிரியை. தங்கை ஹரிணி பிரியங்கா. நடுத்தர வர்க்கக் குடும்பம் என்பதால் பிள்ளைகளின் கல்விக்காக காட்பாடிக்குக் குடும்பத்துடன் குடி பெயர்ந்தனர். இன்று அந்தக் கல்வியே சசிவண்ண மாறன் குடும்பத்தின் முகவரியை மாற்றியுள்ளது.
கல்வியால் விளைந்த உயர்வு: 1990களில் சசிவண்ண மாறன் குழந்தைகளுக்கான கைத்தறி ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலைத் தொடங்க நினைத்து நான்கு முறை முயன்றும் முடியவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவர், வலுவான பொருளாதாரப் பின்னணி இல்லாததால் தனது கனவுகளை மூட்டைகட்டி வைத்தார். ஆனால், ‘ஆயத்த ஆடைத் தொழிலில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
அதில் என்றாவது ஒரு நாள் ஜெயிக்க முடியும்’ என்கிற நம்பிக்கை மட்டும் அவரிடம் இருந்தது. தன் தந்தையின் அந்த நம்பிக்கையையும் கனவையும் பொன்னெழில் பவதாரிணி நிறைவேற்றி வருகிறார்.