

சட்டம் இயற்றப்படுவதைக் கூர்ந்து கவனித்த தமிழரசி, “சட்டத்தை அரசுதான் இயற்ற வேண்டும் என்பதில்லை; உறுப்பினராக நானும் ஒரு மசோதா கொண்டுவந்து சட்டம் இயற்றலாமே” என்று மகிழ்ச்சியோடு சொன்னார். கலைவாணிக்குப் பெருமிதம் கரைபுரண்டது.
“ஆனால் ஒரு கேள்வி” என்றார் தமிழரசி. “மாநிலத்தின் வரவு-செலவு கணக்கு ஏன் சட்டமன்றத்துக்கு வர வேண்டும்?”
கலைவாணி விளக்கினார்: “திட்டமிடத் தவறுவது, தோல்வியைத் திட்டமிடுவதற்குச் சமம். குடும்பத்தைப் போலவே மாநிலத்துக்கும் இது பொருந்தும். அரசின் எதிர்பார்க்கப்படும் வருமானம், செலவுகள், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில், உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு ஓராண்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதை வகுத்துக் காட்டுவதே மாநில பட்ஜெட். இந்தப் பணம் மக்களின் வரிப்பணம்.
அது எவ்வாறு திரட்டப்பட்டுச் செலவிடப்படுகிறது என்பதைக் கண்காணித்து ஒப்புதல் வழங்கும் பெரும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு. எனவேதான் பட்ஜெட் வெறும் எண்களின் தொகுப்பு அல்ல; அது ஓர் அரசின் முன்னுரிமைகளின் கண்ணாடி; மாநிலத்தின் கனவுகளின் வரைபடம் என்கிறோம்.”