

என் பாட்டி சுப்புலட்சுமி அறியாமையும் ஏழ்மையும் போட்டி போட்டுக் குடியிருந்த வாழ்க்கைச் சூழலில் பிறந்து வாழ்ந்தவர். வறுமையால் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இளம் வயதிலேயே திருமணமும் அவருக்கு நடந்தது. தாத்தாவுக்கு நிரந்தரப் பணி இல்லை. பாட்டிக்குத் தபால் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.
கைக்குழந்தையைப் பராமரிக்க முடியாததால், அந்த வேலையைப் பாதியிலேயே அவர் இழக்க நேர்ந்தது. வறுமை வாட்ட, தன் இரண்டு மகள்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டுக் கட்டிட வேலைக்குச் சென்றார். மேஸ்திரியின் கொச்சையான பேச்சு அவரது சுயமரியாதையைச் சீண்ட, அந்த வேலையை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்றார். அங்கு தனக்குத் தரப்பட்ட பணி தவிர்த்துக் கழிவறைகளைத் தூய்மைப்படுத்தச் சொன்னதால் அந்த வேலையையும் துறந்தார்.