Published : 20 Jul 2014 10:23 AM
Last Updated : 20 Jul 2014 10:23 AM

இயற்கையை விரும்பும் பெண்கள்

ஒரு பெண்ணின் கணவன் அல்லது காதலன், அந்தப் பெண் இயற்கை அழகுடன் இருப்பதையே அதிகம் விரும்புவதாக 96% பெண்கள் கூறியுள்ளனர். பொலிவான சருமம் உள்ள பெண்களுக்குத் திருமணம் சுலபமாக அமைவதோடு அன்பான கணவர் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக 96% பெண்கள் கருதுவதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சோப்பு நிறுவனமும் (சின்தால்) பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஏ.சி. நீல்சனும் சேர்ந்து நடத்திய ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது. மேலும் 87% பெண்கள் தங்கள் மேனி அழகைப் பராமரிக்க இயற்கைப் பொருட்களையே அதிகம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அழகுடன், சென்னை மாநகரை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, 18 வயது முதல் 35 வயதுவரை உள்ள பெண்மணிகளிடம் சருமப் பராமரிப்பு பற்றிக் கருத்து கேட்கப்பட்டது. எவ்வகை சோப்புகளைப் பெண்கள் உபயோகப்படுத்துகின்றனர், தங்களை அழகாக வைத்துக்கொள்ள என்னென்ன முயற்சிகளைச் செய்கிறார்கள் முதலான கேள்விகள் கேட்கப்பட்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 97% பெண்கள் தங்களுக்குப் பளபளப்பான அழகிய சருமம் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

வெற்றிக்கு முக்கியம்

ஒரு பெண்ணின் கணவன் அல்லது காதலன், அந்தப் பெண் இயற்கை அழகுடன் இருப்பதையே அதிகம் விரும்புவதாக 96% பெண்கள் கூறியுள்ளனர். வாழ்க்கையின் பல முயற்சிகளில் வெற்றி பெற ஆரோக்கியமான சருமம் பெரும் பங்கு வகிப்பதாக 97% பெண்கள் நினைக்கின்றனர். எனவே தங்கள் மேனியைப் பராமரிக்க எல்லா முயற்சிகளையும் செய்வதாகவே பெரும்பாலோர் தெரிவித்துள்ளனர்.

பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் சருமம் எந்த அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கேட்டதற்கு, 96% பெண்கள் அழகிய சருமம் இருந்தால் நல்ல வேலை கிடைப்பது சுலபமாக உள்ளதாக எண்ணுகின்றனர். பொலிவான சருமம் அதிகத் தன்னம்பிக்கையைத் தருவதால், பணியிடத்தில் பெண்கள் வெற்றிகரமாகச் செயல்படவும் உதவியாக உள்ளதாகவே பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். 60% பெண்கள் தங்கள் பாக்கெட் மணியில் 30% பணத்தைத் தங்கள் சருமப் பராமரிப்புக்காகப் பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

உணவுக்கும் பங்கு உண்டு

சுற்றுபுறத் தூய்மைக் கேட்டால் சருமம் பெரிதும் பாதிப்படைவதாக வருந்தும் பெண்களில் 95 சதவீதத்தினர் தம் மேனியைப் பாதுகாக்க வீட்டிலுள்ள இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதையே விரும்புகிறார்கள். 14% பெண்கள் மட்டுமே தங்கள் மேனி அழகை மேம்படுத்த, பியூட்டி பார்லர்களுக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர். இயற்கையான அழகிய சருமம் இருந்தால் பார்லருக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை என்றே 88% பெண்கள் கருதுகின்றனர்.

சருமப் பராமரிப்பில் உணவின் பங்கு மிக முக்கியமானது எனக் கருதும் பெண்கள் தன் தாய் மற்றும் மாமியாரின் அறிவுரைப்படி நடப்பது பயனளிப்பதாகக் கூறியுள்ளனர். அவர்கள் கூறும் இயற்கை வைத்தியம் சருமத்திற்குப் பொலிவைத் தந்து நல்ல பலன் அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

தினமும் புதிதுபுதிதாக சோப்பு, சரும பராமரிப்பு கிரீம்கள் வந்தவண்ணம் இருந்தாலும் இன்றைய பெண்கள் இயற்கைப் பொருட்களை பெரிதும் விரும்புகின்றனர் என்பது இந்த ஆய்வில் வெளிவந்துள்ள முக்கியமான விஷயம். எனினும் அழகிய சருமத்துடன் ஜொலிக்க விரும்பும் பெண்களுக்கு நேரமும் பொறுமையும் இல்லாததால், ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் செயற்கை கிரீம்கள் மற்றும் சோப்புகளின் பயன்பாடு பெருகுவதற்கான வாய்ப்பும் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டுப் பொருட்களைக் கொண்டு சருமப் பராமரிப்பு செய்துகொள்ள முடியாத பெண்கள் இயற்கைப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் சோப்பு மற்றும் கிரீம்களைப் பயன்படுத்தவும் முயற்சிசெய்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x