பெண் நூலகம்: கலவரங்களில் துண்டாடப்படும் பெண்கள்

பெண் நூலகம்: கலவரங்களில் துண்டாடப்படும் பெண்கள்
Updated on
2 min read

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்து அறுபத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் பிரிவினையைப் பின்னணியாக வைத்துப் பல புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. வரலாற்றையும் தரவுகளையும் பதிவுசெய்யும் நூல்கள், மனதை உலுக்கும் இலக்கியங்கள் என இரண்டு விதமான படைப்புகளும் இதில் அடங்கும். அந்த வரிசையில், ஊர்வசி புட்டாலியா எழுதியிருக்கும் ‘தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ்’ (The Other Side of Silence - Voices from the Partition of India) என்ற புத்தகம் மிகவும் முக்கியமானது.

வரலாற்றில் பெரும்பாலும் பதிவுசெய்யப்படாத பெண்களின் குரல்களை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியிருக்கிறது. பிரிவினையில் உயிர்பிழைத்த பல தரப்பினரையும் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களையும் வலிகளையும் வாய்மொழி வரலாறாக இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார் ஊர்வசி. இவரும் இவர் தோழி ரிது மேனனும் இணைந்து ‘காளி ஃபார் வுமன்’ (Kali for Women) என்ற இந்தியாவின் முதல் பெண்ணியப் பதிப்பகத்தை 1984-ம் ஆண்டு தொடங்கினர். தற்போது, ‘ஜுபான் புக்ஸ்’ என்ற பெண்ணியப் பதிப்பகத்தை இவர் நடத்திவருகிறார்.

1998-ல் வெளியான இந்தப் புத்தகம் பிரிவினையைப் பற்றி நாம் அறிந்திராத மனதை உறையவைக்கும் பல நிகழ்வுகளைப் பேசுகிறது. பிரிவினையின் போது ஏற்பட்ட மதக் கலவரங்களில் இரண்டு மதத்தினராலும் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளான சுமார் எழுபத்தைந்தாயிரம் பெண்களின் துயரம் நிறைந்த வரலாற்றுக்கு இந்தப் புத்தகம் சாட்சியாக விளங்குகிறது.

போர், பிரிவினை மாதிரியான எந்தச் சமூக நிகழ்வாக இருந்தாலும் அதில் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளின் கதைகள் வரலாற்றின் பக்கங்களில் பெரும்பாலும் இடம்பெறாமல் காணாமல்போய்விடும். அப்படியே இடம்பிடித்தாலும் அது வெறும் தரவுகளாகவே இருக்கும். இந்த அம்சத்தை மனதில்வைத்துதான் பிரிவினையின்போது பாதிக்கப்பட்ட பெண்களையும், குழந்தைகளையும் பற்றி இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் ஊர்வசி.

இந்தப் புத்தகம் எட்டுத் தலைப்புகளில் பிரிவினையைப் பற்றி அலசுகிறது. பிரிவினையின்போது இந்தியா திரும்பாமல் பாகிஸ்தானில் தங்கிவிட்ட அவருடைய ராணா மாமா, அம்மா சுபத்ரா புட்டாலியா இருவருடைய கதைகளிலிருந்துதான் இந்தப் புத்தகம் தொடங்குகிறது.

பிரிவினையின் கோர முகம்

பெண்கள் என்ற அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் கதைகள் ஒவ்வொன்றும் இந்தியப் பிரிவினையின் மனிதநேயமற்ற இன்னொரு பக்கத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள தோஹா கல்ஸா என்ற கிராமத்தில் ஒரே கிணற்றில்விழுந்து தொண்ணூறு பெண்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். இந்த நிகழ்வைப் பற்றி அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளவிருந்ததை நினைவுகூரும் பசந்த் கவுர், தங்கள் குடும்பப் பெண்களின் மானத்தைக் காப்பாற்ற தன் அப்பாவே அவர்களை எப்படி வெட்டிக் கொன்றார் என்பதை நினைவுகூரும் பஹாதூர் சிங் போன்றவர்கள் இந்தப் புத்தகம் முழுவதும் நிரம்பியிருக்கிறார்கள்.

பிரிவினையின்போது கடத்தப்பட்ட பெண்களை மீட்டு, மறுவாழ்வு அமைத்துத் தரும் இந்தியாவின் மத்திய மீட்பு அமைப்பில் பணியாற்றிய தமயந்தி ஷாகலின் அனுபவங்கள் இந்தப் புத்தகத்தின் அடித்தளமாகச் செயல்படுகின்றன. பல மாதங்கள் பேசி அவரது நேர்காணலைப் பதிவுசெய்திருக்கிறார் ஊர்வசி.

பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளும் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் குறித்து எடுத்த முடிவை அமல்படுத்துவதில் இருந்த சவால்களையும் உணர்வுப் போராட்டங்களையும் வலியுடன் இந்தப் புத்தகம் பதிவுசெய்திருக்கிறது. அத்துடன், பிரிவினையின்போது ஒடுக்கப்பட்ட பெண்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதையும் ஒரு தலைப்பில் இந்தப் புத்தகம் விளக்குகிறது. மதத்தின் பெயராலும் கவுரவத்தின் பெயராலும் கொலைசெய்யப்பட்டு, வரலாற்றில் பதிவுசெய்யப்படாத பெண்களின் குரல்களையும் இது எதிரொலிக்கிறது.

‘மௌனத்தின் அலறல்’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை கே.ஜி.ஜவர்லால் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in