பார்வை | ஆணவமா? ஆணாதிக்கமா?

பார்வை | ஆணவமா? ஆணாதிக்கமா?

Published on

ஆணவக் கொலை என்பது உலகெங்கிலும் நடைபெற்று வருகிற கொடூர நிகழ்வு. விலங்கிலிருந்து பரிணாமம் பெற்ற மனிதன் விலங்குலகத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத இந்தப் பண்பை எப்படி, ஏன் வளர்த்துக் கொண்டானோ? எவ்வளவோ நாகரிக மாற்றங்களைப் பெற்ற பிறகும் ‘கௌரவம்’ என்கிற பெயரில் ஈவு இரக்கமின்றி நடத்தப்படும் இந்தக் கொலைகள் தங்களால் நேசிக்கப்பட்டவர்கள் மீதே நிகழ்த்தப்படுகின்றன என்பது கொடுமையின் உச்சம்.

காதல் என்கிற உணர்வு இயற்கையின் நியதி. உயிரின் இயல்பு. குறிப்பாக நமது சமுதாயத்தில் எத்தனை வயதான பிறகும் பெண்ணாக இருந்தாலும் ஏன் ஆணாக இருந்தாலும் எந்தக் குடும்பமும் பிள்ளைகள் தாங்களாகத் தங்கள் இணையரைத் தேடுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதில் தங்களின் தனிப்பட்ட கௌரவம் உள்ளிட்ட குடும்ப கௌரவமும் அதற்கடுத்தபடியாக சாதி கௌரவமும் பாதிக்கப்படுவதாகவும் தங்கள் பிள்ளைகள் தங்களுக்குத் துரோகமிழைத்துவிட்டதாகவும் எண்ணி மனதுக்குள் கொந்தளிக்கிறார்கள். அவர்களை ஆட்கொள்ளும் இந்த மன சமநிலையின்மை அவர்களைக் கொலைகாரர்களாக மாற்றுகிறது. பெரும்பாலும் இந்தக் கொலைகளைச் செய்யும் கொலைகாரர்கள் இதைத் தாங்கள் செய்யவில்லை என்று மறைக்க முற்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் மானத்தை அவர்கள் செய்த கொலைகள்தாம் காப்பாற்றுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

தந்தையின் கௌரவப் பிரச்சினை

இங்கு அடிப்படையான பிரச்சினை ஒரு ஆணின் தலைமை மீறப்படுவதுதான். இதே உணர்வில்தான் மனைவி தன்னை விடுத்து இன்னொரு ஆணுடன் தொடர்பில் இருக்கிறாள் என்பது தெரிந்தவுடன் கணவன் அந்த மனைவியைக் கொன்றுவிடத் துணிகிறான். பல இடங்களில் இந்தக் கொலைகளின் இன்னொரு முகம் தற்கொலைகளாகவும் இருக்கிறது. கொலை செய்யும் அளவுக்குத் துணிவில்லாதவர்கள் அல்லது இன்னும் அதிகமாகப் பிள்ளைகளை அல்லது மனைவியைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்க வேண்டும் என எண்ணும்போது இவர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இதில் சமூகத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. சில மனிதர்கள் அவர்கள் பிள்ளைகள்மீது வைக்கும் பாசத்தால் அவர்களின் சுயமான திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தாலும் சமூகப் பார்வைக்கு அஞ்சுகிறார்கள். இன்னொரு பக்கம் திருமணம் என்பது காலங்காலமாக இரு தனிமனிதர்களின் இணைப்பு என்பதைத் தாண்டி இரு குடும்பங்களின் இணைப்பாக நடந்துவருவதால் அவர்களுக்குச் சம்பந்தம் செய்து கொள்ளப்போகிற குடும்பம் சார்ந்து அவர்களின் வர்க்கம் சார்ந்து போட்டு வைத்திருக்கும் கணக்கு பொய்த்துப்போவதும் அவர்களது சமுதாய உறவு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படித்தான் தந்தை ஆதிக்கக் குடும்ப அமைப்பு, சாதி, வர்க்கம் இவையனைத்துக்கும் இந்தக் கொலைகளில் கூட்டுப் பங்கு இருக்கிறது.

நமது நாட்டில் வட மாநிலங்களில் இன்றும் சாதி மறுப்புத் திருமணம் என்பது சிம்ம சொப்பனமாகவே இருப்பதுடன் மிக அரிதாக நடைபெறும் நிகழ்வாகவே இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணங்கள் திராவிட இயக்கங்களால் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. இதையும் தாண்டி இருபதாண்டுகளாகப் பல்வேறு முனைகளில் இருந்து தூண்டப்பட்ட வன்மத்தின் காரணமாகச் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பல இணையர்கள் கொல்லப்பட்ட வரலாற்றையும் நாம் அறிவோம். திவ்யா - இளவரசன், கௌசல்யா - சங்கர் போன்ற இளைஞர்களின் அவல வாழ்வு நாம் அறிந்ததே. இதில் சாதி என்கிற ஒற்றைக் காரணத்தை மட்டுமே சமூகச் செயற்பாட்டாளர்களும் முற்போக்கு இயக்கங்களும் தூக்கிப் பிடித்தனர். ஆனால், இதற்குள் தந்தைவழிச் சமுதாயத்தின் குடும்ப ஆதிக்கம் வகிக்கும் பாத்திரத்தை ஏனோ பலரும் பேச முன்வரவில்லை.

சாதி மட்டுமே காரணம் அல்ல

குடும்பம் காதலை எதிரியாகப் பார்க்கிறது. பிள்ளை களின் சுயேச்சையான முடிவை அத்துமீறலாகப் பார்க்கிறது. எந்தச் சாதி ஆணவப்படுகொலையும் குடும்பத்தினரின் முதன்மையான பங்களிப்பின்றி நிறைவேறவில்லை. ஆனால், சாதியை எதிர்க்கிற நாம் குடும்பம் என்கிற அமைப்பைக் கேள்வி கேட்கவோ அதன் அமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்று கோரவோ தயாராக இல்லை. சொந்த மாமன் மகனைக்கூடத் தன் விருப்பத்துக்கு மாறாகக் கட்டினால் மகளை வெட்டிப்போடத் தகப்பன் தயாராக இருக்கும் அமைப்புதான் குடும்பம். தான் பார்த்த மாப்பிள்ளையைத் தான் மறுத்த பிறகு மகள் காதலித்தவுடன் அதைத் தன் கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு மகளை மோசமான வியாதிக்காரனுக்குக் கட்டிவைக்க தகப்பன் முயல்வதை ‘தூறல் நின்னு போச்சு’ திரைப்படம் விரிவாகவே பேசியிருக்கிறது. ஆணவக்கொலை என்பதைவிட கௌரவக் கொலை என்கிற பெயர் காரணப் பெயராக அதன் காரணியை உணர்த்துகிறது. எனவே, கௌரவக்கொலை என்கிற பெயர்தான் சரி. ‘ஆணவக் கொலை’ என்கின்ற சொல் ‘கௌரவத்தின்’ இடத்தைக் காப்பாற்றிவிட்டது. உண்மையில் நாம் கௌரவம் என்கிற பெயரில் காப்பாற்றிவரும் பல்வேறு மதிப்பீடுகளே இந்த நிலைக்குச் சம்பந்தப்பட்டவர்களை இழுத்துச் செல்கின்றன. கௌரவத்துக் காக நடத்தப்படும் இந்தக் கொலைகளைக் கௌரவக் கொலைகள் என்று அடையாளப்படுத்தினால்தான் கௌரவம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும்.

அரசுக்குப் பெரும் பொறுப்பு உண்டு

சில நாட்களுக்கு முன்பு கும்ப கோணத்தில் சாதி மாறி திருமணம் செய்த காதல் தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதில் கொலை செய்தவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்றவுடன் சிலர் இந்தக் கொலை ஆணவக் கொலையிலேயே வராது என்று சொல்லத் தலைப்பட்டு விட்டார்கள். இப்படியான உரையாடல் நாம் தொடர்ந்து செய்துவரும் பல தவறுகளின் தொடர்ச்சியே. ஆணவக் கொலைகளில் குடும்ப அமைப்பின் பங்களிப்பை முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருந்தால் தற்போது நடந்த கொலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்பது நன்கு தெரியும். இங்கு நமது முற்போக்காளர்களில் பலர் காதல் எதிர்ப்பைச் சாதியப் பிரச்சினையாக மட்டுமே முன்னிறுத்துகிறார்கள். ஒரு விஷயத்தில் பல காரணிகள் செயல்படும்போது அதில் ஒரு காரணியை முக்கியத்துவப்படுத்தலாம். ஆனால், அது மட்டும்தான் என்று பேசுவது நமக்கு வாடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், தந்தைவழிச் சமூகத்தின் அடிப்படை மதிப்பீடுகளைக் கேள்வி கேட்க இங்கு யாரும் தயாராக இல்லை. ஆணவக் கொலைகளில் ‘சாதி’க்கும் பெரிய பங்கிருக்கிறது. ஒரு சில சாதியினர் அதிக வன்முறையோடு இதை அணுகுகிறார்கள் என்பதிலும் உண்மை இருக்கிறது. ஆனால், இவை ஒவ்வொன்றும் பகுதி உண்மைகளே தவிர தனித்த முழுமை பெற்ற ஒற்றை உண்மைகள் அல்ல.

அதே போல் இந்தக் கொலைகள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் நடத்தப்பட்டிருப்பதால், இதில் சாதி அமைப்புக்கோ சாதிய இறுக்கத்துக்கோ தொடர்பில்லை என்றும் கூற முடியாது. சாதி அமைப்பின் எந்தப் படிநிலையில் இருந்தாலும் அவை சாதிய இறுக்கத்தைத் தொடர்ந்து பேணவே முற்படுகின்றன. சுய சாதியில் மணம் முடிக்கும் அகமணமுறை என்கிற விதியே தங்கள் கூட்டத்தின் வலிமையைப் பாதுகாக்கும் என்றே ஒவ்வொரு சாதியக் குழுவும் நினைக்கிறது. இதற்கு எந்தச் சாதியும் இன்றைய தேதியில் விதிவிலக்கல்ல. இன்னொரு புறம் இன்னொரு சாதியக் குழுவிலிருந்த பெண் கொண்டுவரப்பட்டால் ஏற்றுக் கொள்வதும் தன்னுடைய சாதிப் பெண் இன்னொரு சாதிக்கு நகர்த்தப்படக் கூடாது என்கிற உளவியலும் சேர்ந்தே சாதிய உணர்வாக வெளிப்படுகிறது. ஏனெனில், சாதி அமைப்பு பெண்ணைத் தன் உடமையாகவே வைத்திருக்கிறது. சாதியாக ஒன்று கூடும் இடங்களில் அது எந்த பதாகைக்குக் கீழ் நடந்தாலும் மாற்றுச் சாதியில் திருமணம் செய்யாதீர்கள் என்கிற வேண்டுகோள் அனைத்துச் சாதிகளாலும் முன்வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பின்னணியில் சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக நடத்தப் படும் கொலைகள் எதுவாக இருந்தாலும் அதில் கொலையாளிகள் யாராக இருந்தாலும் கொலை செய்யப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவையனைத்தும் சாதி ஆணவக் கொலைகள்தாம்.

சட்டங்கள், சமுதாய விழிப்புணர்வு இவற்றின் வாயிலாக இவற்றைக் குறைத்திட நாம் போராடலாம். ஆனால், மனித வாழ்க்கை ஆண் தலைமையிலிருந்து விடுபட வேண்டும். எப்படி விலங்கினங்கள் இளமைப் பருவத்திலிருந்து முதிர்ச்சி அடையும்போது பின் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக் கொள்ளுமாறு விடப்படுகின்றனவோ, அதுபோல் வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்பதை மனித சமுதாயம் உணர்ந்து அதற்கேற்ப மாற்றங்களைப் படைக்க முன்வர வேண்டும். நமது கல்வி அமைப்பிலும் இதற்கேற்ப மாற்றங்கள் அல்லது புரட்சி நிகழ்ந்திட வேண்டும். குழந்தை வளர்ப்பிலும் கல்வியிலும் பெற்றோரின் சுமை பெருமளவு குறைக்கப்பட்டு அரசின் பங்களிப்பு அதிகப்படுத்தப்பட வேண்டும். வயது வந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் வாழ்க்கை அவர்கள் பொறுப்பிலும் அவர்கள் விருப் பத்தின் பேரிலும் அமைய வேண்டும். அதற்கான சமுதாய வெளி அரசின் பொறுப்பில் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தக் குடும்ப கௌரவம், சாதி கௌரவம் என்கிற முள்கிரீடங்கள் மனிதர்களின் தலையிலிருந்து இறங்கும். மனித உயிர்கள் அதற்குப் பலியாவதும் தடுக்கப்படும்.

கட்டுரையாளர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: msmdu2013@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in