Last Updated : 08 Jan, 2017 03:41 PM

 

Published : 08 Jan 2017 03:41 PM
Last Updated : 08 Jan 2017 03:41 PM

கமலா கல்பனா கனிஷ்கா: இந்தியாவின் முதல் ஆசிரியைக்கு மரியாதை!

புத்தாண்டு இரவில் கடற்கரைக்குச் சென்று திரும்பிய அனுபவத்தை விவரித்துக்கொண்டிருந்தாள் கனிஷ்கா. கமலா பாட்டியும் கல்பனா ஆன்ட்டியும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடிட்ட போல! ஆனா பெங்களூருவில் நிகழ்ந்த சம்பவம் வேதனையா இருக்கு. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கானவங்க கூடியிருந்தாங்க. பாதுகாப்புப் பணியில் போலீஸும் இருந்திருக்காங்க. கட்டுக்கடங்காத கூட்டத்துல பெண்களிடம் சில ஆண்கள் கேவலமா நடந்திருக்காங்க. அதைப் பத்தி போலீஸில் புகார் செஞ்சும் முதலில் வழக்கு பதியலை. இந்தச் சம்பவத்துக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் கொடுத்திருக்க விளக்கம் ரொம்ப கேவலம்” என்று கொதித்தார் கமலா பாட்டி.

“ஆமாம் பாட்டி. பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களுக்கு அவர்கள் அணியும் மேற்கத்திய ஆடைகள்தான் காரணம்னு அந்த அமைச்சர் சொல்லியிருக்கார். இது அபத்தத்தின் உச்சம். பொது இடங்களில் கூடியிருக்கும் பெண்கள் மீது இத்தகைய பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுறவங்களை நியாயமா விமர்சிச்சிருக்கணும். அதை விட்டுட்டு பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு நல்லொழுக்கப் பாடம் சொல்லிக் கொடுக்குறாரு” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“அதே பெங்களூருவில் ஒரு பெண் தனியா நடந்து வரும்போது, பைக்கில் வந்த ரெண்டு பேர் மோசமா துன்புறுத்தும் சிசிடிவி பதிவு வெளியாயிருக்கு. இதில் என்ன கொடுமைன்னா தட்டிக் கேட்கும் தூரத்தில் ஒரு கும்பல் அதை வேடிக்கை பார்த்துக்கிட்டு சும்மா நின்றிருக்கு. கடைசியில் அந்த ரெண்டு பேரும் அந்தப் பெண்ணைக் கீழே தள்ளிட்டுப் போறாங்க. இந்த மாதிரி ஆண்களை எந்தப் பட்டியல்ல வைக்கிறதுன்னே தெரியலை”

“இரவு என்பது ஆண்களுக்கு மட்டும்தான்னு இந்தச் சமூகம் இன்னும் நினைச்சிட்டிருக்கு. பகலும் இரவும் ஆணுக்கு எப்படியோ அப்படிதான் பெண்ணுக்கும். இரவில் பெண் வெளியே இருந்தால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்ங்கற நினைப்பு எவ்வளவு மடத்தனமானது. இரவும் பெண்களுக்குச் சொந்தமாக மாறணும்” என்று அழுத்தமாகச் சொன்னார் கமலா பாட்டி.

கல்பனா ஆன்ட்டி கொடுத்த ஏலக்காய் டீயைக் குடித்தபடியே, “சமீபத்துல சவுதி பெண்கள் சிலர் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்காங்க. அதில் சவுதியில் பெண்கள் எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கப்படுறாங்கன்னு பாடியிருக்காங்க. ‘உங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கோம், எங்களால் வேலைக்குப் போக முடியலை, எங்கள் விருப்பம்போல பயணம் செய்ய முடியுலை, ஏன் கார்கூட ஓட்ட முடியலை. எங்களை ஏன் கண்காணிச்சுக்கிட்டே இருக்கீங்க? இந்த உலகத்துல ஆண்களே இல்லாமல் போகட்டும்’னு துள்ளல் இசைப் பின்னணியில் இந்தப் பாட்டு ட்விட்டரில் பிரபலமாகியிருக்கு” என்றாள் கனிஷ்கா.

“ம்… கேரள மாநிலம் மலப்புரம் மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிக்குக் கழிவறையில குழந்தை பிறந்திருக்கு. பிரசவ வலியில துடிச்சுக்கிட்டு இருந்த அந்தப் பெண்ணை வலி குறையணும்னா சிறுநீர் கழியுங்கன்னு சொல்லிருக்கார் செவிலி. எழக்கூட முடியலைன்னு சொன்னவங்களை நிர்பந்தப்படுத்தி கழிவறைக்கு அனுப்ப, அங்கேயே பிரசவம் நடந்திருச்சு. மாநில அரசு இந்தச் சம்பவம் தொடர்பா விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கு” என்று கமலா பாட்டி சொல்லவும் அங்கே இறுக்கம் சூழ்ந்தது.

கல்பனா ஆன்ட்டி மீண்டும் பேச்சை ஆரம்பித்தார். “சாவித்ரிபாய் பூலேவை கூகுள் கவுரப்படுத்தியிருக்கு. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சாவித்ரிபாய், சாதிய அநீதிகளும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளும் தலைவிரித்தாடிய காலத்தில் பெண் உரிமைகளுக்காகப் போராடியவர். தன் கணவரிடம் கல்வி கற்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரானார். பெண்களுக்காக ஒரு பள்ளியையும் ஆரம்பித்தார். கணவர் மகாத்மா ஜோதிராவ் பூலேவுடன் சேர்ந்து சமூகச் சீர்திருத்தங்களில் பங்கேற்றார். இவருக்காக கூகுள் டூடுல் வெளியிட்டு அசத்தியிருக்கு!”.

“கிரேட்! 120 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு பெண்மணி நம்ம நாட்டில் பெண்களுக்காகவும் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடியும் இன்னும் விடியலை பாருங்க” என்று அலுத்துக்கொண்டார் கமலா பாட்டி.


சாவித்ரிபாய் பூலே

“நம்ம நாட்டில் விடிவு ஏற்பட ஆயிரக்கணக்கான சாவித்ரிபாய்கள் உருவாகணும்” என்றாள் கனிஷ்கா.

“சாவித்ரிபாய் போல போராடும் பெண்களைத்தான் எப்படி நடத்துது இந்தக் காவல் துறைன்னு நாம பார்க்கிறோமே. பண மதிப்பிழப்பு பிரச்சினை 50 நாட்களைக் கடந்தும் தீர்ந்தபாடில்லை. இதற்காக ஜனநாயக வாலிபர் சங்கமும் மாதர் சங்கமும் இணைந்து போராட்டங்களை நடத்தியிருக்காங்க. சென்னையிலும் மதுரையிலும் போராட்டக்காரர்களிடம் காவல்துறை மிகக் கொடூரமாக நடந்துகொண்டது. ஆண்களின் மண்டைகளை உடைத்ததில் ஆபத்தான நிலையில் சிலர் உயிருக்குப் போராடிட்டு இருக்காங்க. பெண் போராட்டக்காரர்களிடம் பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்தியிருக்காங்க. ஆபாச வார்த்தைகளில் திட்டியிருக்காங்க. ஒரு பெண் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொன்ன வீடியோவைக் கேட்டபோது என்னால் தாங்கவே முடியலை” என்ற கமலா பாட்டியின் கண்கள் கலங்கின.

“கொடுமையின் உச்சம். பெண் போராட்டக்காரர்களை பெண் காவலர்கள்தானே கையாளணும்? முதலில் காவல்துறைக்குத்தான் சட்டம் சொல்லிக்கொடுக்கணும். இப்படி அடிச்சவங்களுக்காகவும் சேர்த்துதானே அவங்க போராடினாங்க? இது அவங்களுக்குப் புரிஞ்சிருந்தா இந்த மாதிரி நடந்திருக்குமா?” என்ற கல்பனா ஆன்ட்டி, கமலா பாட்டியை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x