இது எங்க சுற்றுலா! - குகையை விரலில் தாங்கினார்

இது எங்க சுற்றுலா! - குகையை விரலில் தாங்கினார்
Updated on
1 min read

நானும் என் கணவரும் சுற்றுலாவுக்கு மேகாலயா சென்றோம். என் பள்ளி நாட்களில் இந்தியாவில் அதிக மழை பொழியும் இடம் என நான் படித்த சிரபுஞ்சியைப் பார்த்துப் பிரமித்தேன். அங்கிருந்து ஆறு கி.மீ. தொலைவில் இருந்த [MAWSMAI CAVES] மவ்ச்மை குகையைப் பார்க்கச் சென்றோம். அந்தக் குகையின் நீளம் 150 மீட்டர். ஒரு வழிப்பாதையைக் கொண்ட இந்தக் குகை, பூமிக்கடியில் இயற்கையின் கைவண்ணத்தில் சுண்ணாம்புக் கற்களாலான பலவித அழகிய வித்தியாசமான உருவங்களைத் தன்னுள் மறைத்துக்கொண்டுள்ளது.

குகையின் உள்ளே ஆங்காங்கே பல்புகள் பொருத்தியிருப்பதால் ஓரளவுக்கு வெளிச்சம் உண்டு. சில இடங்களில் மிகவும் குனிந்தும், குறுகிய இடைவெளிக்குள் செல்லும் படியாகவும் இருந்தது. அவ்வப்போது நம் மேல் விழும் சிறு சிறு நீர்த்துளிகள் நம்மைச் சிலிர்க்கவைக்கின்றன. நாங்கள் குகைக்குள் செல்லும் முன் அதன் வாயிலில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டோம். கிருஷ்ணர் கோவர்த்தன மலையைப் பிடிப்பதைப் போல என் கணவர் குகையைத் தொட்டபடி நின்று போஸ்கொடுத்திருந்தார். அதனாலேயே இது என் மனதுக்கு நெருக்கமான ஒளிப்படமாகிவிட்டது.

அருவிகள், காடுகள், வனவிலங்குகள் என இயற்கையோடு நிறைய பயணம் செய்து இருந்தாலும் இந்தக் குகை அனுபவம் மனதில் நீங்காத இடம் பெற்ற ஒன்று.

- பானு பெரியதம்பி, சேலம்.

வாசகிகளே, நீங்களும் உங்கள் சுற்றுலா அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். பார்த்த இடங்கள், படித்த பாடங்கள், பட்ட அவஸ்தைகள், மகிழ்ந்த தருணங்கள், சுவைத்த உணவு வகை... இப்படி நினைத்துப் பார்க்க எத்தனையோ அனுபவங்கள் இருக்கும் அல்லவா? அவற்றை அங்கு நீங்கள் எடுத்துக்கொண்ட ஒளிப்படங்களோடு எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். - மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in