

நாம் நினைப்பதுபோல் சமையல் வேலை என்பது சுலபமானது அல்ல. என் அம்மா ஆசிரியராகப் பணியாற்றியபோதே எனது ஆர்வத்தால் அவர்களுடன் சேர்ந்து சில வேலைகளைச் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள் விளையாட வந்தால் அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுவேன். எனவே, அம்மா என்னைச் சமையலறைக்குள் வரக் கூடாது எனக் தடை போட்டுவிட்டார்கள். ஆனாலும், மதியம் அவர் தூங்கும்போது சுண்டல், உப்புமா போன்றவற்றை எனக்குத் தெரிந்த வகையில் செய்துவிட்டு அவருக்குத் தெரியக் கூடாது என்பதால் பாத்திரங்களைச் சுத்தமாகக் கழுவித் துடைத்து அதனதன் இடத்தில் வைத்துவிடுவேன்.
திருமணம் ஆனபின் நானும் என் மனைவியும் பணிக்குச் செல்லவேண்டி இருந்ததால் காலை ஐந்து மணிக்கே எழுந்து பரபரப்பாகச் சமைப்போம். காபி தயாரிப்பது, காய்கறி - வெங்காயம் நறுக்குவது, இட்லி - தோசை சுடுவது என அனைத்தையும் என் பொறுப்பாக எடுத்துக்கொண்டேன். என் மனைவிக்கு அல்சர் வந்தபோது தினமும் கேரட், நெல்லிக்காய், வாழைத்தண்டு ஜுஸ்களைத் தயாரித்துத் தருவேன். அதில் அவ்வப்போது புதினா, கொத்தமல்லி இலைகளைப் போட்டு வித்தியாசமான சுவையை ஏற்படுத்துவேன். எந்தச் சட்னி செய்தாலும் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்தால் சுவை கூடும் என்பதைக் கண்டறிந்தேன்.