

நீண்ட காலமாகப் பெண்களை வீட்டுக்குள் சிறைபிடித்திருந்த ஆட்டுக்கல்லையும் அம்மிக்கல்லையும் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் மூலமாக மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். பலகாலமாக வழிவழியாகச் சொல்லப்பட்டுத் தற்போது, ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அறிவியல் உண்மையற்ற மூடநம்பிக்கைகள், அண்மைக்காலமாகத் திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் திணிக்கப்படுவது வேதனையானது. விறகடுப்பின் மகத்துவம், வீட்டிலேயே பிரசவம் என்று தொடங்கிய ‘அந்தக் காலத்துல...’ பட்டியலில், கையால் மாவரைத்துச் சுடும் இட்லியின் சுவையும் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது.
சிறு வயதில் அனுபவித்த சுவையை நினைவில் வைத்திருந்து, அதற்காக ஏங்குவதிலேயே சராசரி இந்திய ஆண்களில் பலர் பாதி வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். ‘இட்லி கடை’ படத்திலும் அதே கதைதான். வெளிநாட்டில் இருக்கும் ஒரு பன்னாட்டு உணவகத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன் தனுஷுக்கு, அங்கே ‘பர்கரை’ப் பார்க்கும் போது தன்னுடைய அப்பா கையால் மாவரைத்துச் சுடும் இட்லியின் சுவை நினைவுக்கு வருகிறது.