

பெண்களுக்குச் சமையலைத் தவிர, கோலம் போடுவதைத் தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாது என்று நினைக்கிறவர்களும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதையும் தேர்ந்தெடுக்கத் தெரியாது என்கிற அவர்களது எண்ணத்தின் விளைவுதான் அவளுக்கு அவளுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாது என்று ஒரு குடும்பம் மிகத் தீர்மானமாக நம்புவது. அதன் சாட்சியாகத்தான் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் மிக அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் வித்யா என்கிற இளம்பெண் இப்படித்தான் தலையில் அடிபட்டு இறந்துபோனாள் என்று சொல்லப்பட்டது.
அறிக்கையும் விவாதமும்: வித்யாவின் அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குச் சென்று வந்ததாகச் சொல்லப்படும் சில மணித்துளிகளில்தான் பீரோ அவருடைய தலையில் விழுந்து அவர் இறந்துபோனதாக முதலில் சொன்னார்கள். அதற்கடுத்த சில மணி நேரத்திலேயே வித்யாவின் சடலத்தைப் புதைத்துவிட்டனர். வித்யாவின் அக்கம் பக்கத்து வீட்டினரும் அவரது காதலரும் கொடுத்த புகாரின் பேரிலேயே வித்யாவின் மரணத்தின் மீது விசாரணையைக் காவல்துறை தொடங்கியது. அப்போதுதான் வித்யாவின் அண்ணனே அவளைக் கொலை செய்தது தெரியவந்தது. தன் தங்கையைக் கொலை செய்ததாக அந்தச் சகோதரனே ஒப்புக்கொண்ட போதும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அது குறித்து வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய விவாதத்திற்குள்ளானது. வித்யா சரியாகப் படிக்காததால் அவருடைய அண்ணன் அவரை அடித்ததாகவும் அதனால் அவர் இறந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.