

கவிஞர் பெருந்தேவியின் முதல் கவிதை 90களில் வெளிவருகிறது. நம் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய செல்போன் போன்ற தகவல் புரட்சி 90களில்தான் அறிமுகமாகிறது.
பெண்கள் தங்கள் உடலைக் கவிதை களில் அறிவிக்கிறார்கள். ஒரு புதிய தலைமுறை வருகிறது. இதற்கிடையில் கவிதையிலும் வெளியிலும் நிகழ்ந்த மாற்றங்களை பெருந்தேவியின் கவிதை உள்வாங்கியிருக்கிறது.
விளக்கு அணைக்கப்பட்ட அறையின்கணினி ஒளியை, செல்போன் கட்டணம் மலிவான பிறகு அதிகரித்த உரையாடல்களின் அலுப்பை, மின்னஞ்சல் அரட்டையை, ஃபேஸ்புக் கருத்துத் தெறிப்புகளை எல்லாம் இவரது கவிதைகளில் உணர முடி கிறது. சிலப்பதிகார நாயகி மதுரையை எரித்ததுபோல் பெருந்தேவியின் கவிதைகள் பேருருவாகச் சில இடங் களில் எழுகின்றன. சில இடங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பின் நாய்க் குட்டியாகவும் தண்மைப் பொருள் பேசுகின்றன. சில கவிதைகள் மரபின் தன்மையுடன் இருக்கின்றன.
மாபெரும் சுதந்திரத்தை பெருந்தேவியின் கவிதைகளில் உணர முடிகிறது. கவிதையின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அதை வெளிப் படுத்த அவர் வடிவத்தைத் தேர்ந்தெடுக் கிறார். வடிவங்களால் ஆனதல்ல கவிதை என்பதன் சாட்சியங்களாக அவர் கவிதைகளை உருவாக்கிக் காட்டுகிறார். கட்டற்ற சுதந்திரம் பெற்ற அவரது கவிதைகள் இயல்புத் தன்மையுடன் இருக்கின்றன. இயல் பாகச் சிரிக்கின்றன. இயல்பாகப் பேசுகின்றன. இயல்பாகக் கிண்டலடிக் கின்றன. இயல்பாக விசனப்படுகின்றன. மனத்தில் இருந்து வடிவம் பெறுவதற்கு இடையிலான அரிதாரப் பூச்சுகளை அவரது கவிதைகளில் எங்கும் காண முடியவில்லை. அவற்றுக்கு கேமரா கூச்சமும் இல்லை.
இதன் அர்த்தம் பெருந்தேவியின் கவிதைகளுக்கு வடிவப் பிரக்ஞை இல்லை என்பதல்ல. கவிதைத் தொழில் நுட்பத்தின் தேர்ச்சி அவரிடம் உண்டு. தன் முன்னோடிக் கவிஞர்களின் வடிவத்திலிருந்து திமிறி எழ வேண்டும் என்கிற மூர்க்கத்தை, அவரது ‘தீயுரைத் தூக்கம்’ தொகுப் பில் வலுவாகக் காண முடியும்.
சில கவிதைகளில் நாம் ஒரு நவீன சிறுகதையை உணர முடியும். நீதி, சுதந்திரம் போன்ற பல்வேறு கற்பிதங்களுக்கு இடையில் சிக்க லாகியிருக்கிற ஆண் - பெண் உறவு அவர் கவிதைகளின் முக்கியமான பாடுபொருள். சூழல் விவரிப்பைச் சேர்த்துவிட்டால் கதையாக ஆகிவிடக் கூடிய வாய்ப்புள்ள கவிதைகளும் உண்டு. இவை அல்லாமலும் பல வடிவங் களை பெருந்தேவி முயன்று பார்க்கிறார். ‘முத்தம் கொடுங்கள், முத்தங்களாகக் கொடுங்கள்’ என்கிற இரு பத்திகளாக சிருஷ்டிக்கிறார். பொதுவாக அவரது கவிதைகளில் அடைப்புக் குறியில் சொற்களைப் பார்க்க முடிகிறது. இது கவிதை வடிவாக்கத்தின் ஓர் உத்திதான். இந்த அடைப்புக்குறியின் மூலம் பொதுப் புரிதலின் மற்றொரு பக்கத்தைக் காட்ட நினைக்கிறார், நீதிக்கான குறியீடாக உள்ள அசோகச் சக்கரத்தின் அந்தப் பக்கத்தில்மறைந்திருக்கும் சிங்க முகம்போல.
இந்த உலகம் என்னும் கற்பித அமைப்புக்குள்ளே இந்தப் புதிய நூற்றாண்டில் மீண்டும் ஓர் உலகம் உருவாகியிருக்கிறது. அதையும் பெருந்தேவியின் கவிதைகள் கவனித்துப் பதிவுசெய்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் பெருந்தேவி கவிதைகளின் மைய அச்சாக அந்த உலகம் குறித்த அபிப்ராயங்கள் ஆகி இருக்கின்றன. நவீன சமூக வலைதள உலகம்தான் அது. இந்த நவீன உலக செயல்பாடுகளின் ஓர் அங்கமாக இருந்து பெருந்தேவியின் கவிதைகள் அவற்றை விமர்சிக்கின்றன.
தற்கொலை செய்துகொள்ளப் போவ தாக ஃபேஸ்புக்கில் அறிவித்து விட்டு இறந்துபோன இளைஞன் குறித்த செய்தியை எல்லாரும் கவனித்திருப் போம். அந்த இளைஞனைப் போன்ற ஒருவன் பெருந்தேவியின் கவிதையில் வருகிறான். கணினித் திரையின் முன் தற்கொலை செய்துகொள்கிறான். இது பதிவாக அல்ல. பெரும் விவாதமாகக் கவிதையில் நடக்கிறது. இந்தத் தற்கொலை, சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது. இந்தத் தற்கொலை சரியா, தவறா, அதில் உள்ள நுண் அரசியல் என்ன, அதனால் தேசியவாதம் என்னாகும் என்பன போன்று கவிதையில் தர்க்கம் நீள்கிறது. கவிதை எழுதுவது குறித்த கவிதை ஒன்றில், கவிதைகளைக்கூட ‘பெரும் பொறுப்பில் ஆழ்த்தாதே’ என்கிறார். ‘அரசியல் சரிகளுக்காகக் கவிதை எழுதாதே’ என்கிறார். அரசியலற்ற, லட்சியங்கள் அற்ற 21ஆம் நூற்றாண்டின் அரசியலைச் சொல்கின்றன இவரது கவிதைகள்.
பெருந்தேவியைப் பெண் கவிஞர்கள் என்கிற வரிசையில் வைத்துப் பார்க்க முடியாது. ஆனால், அவரது கவிதை களின் மையமாக ஆண்/ பெண் உறவு நிலைகள் இருக்கின்றன. இவரது கவிதைகளில் பெண்கள் பல நிலைகளில் வருகிறார்கள். சேலை அணிந்து பார்க்கும் பெண், மனைவிமார் எல்லாரும் வருகிறார்கள். உறங்கும்போது குறுஞ்செய்திகள் கூட ஆடைகள் களைவதுபோல நழுவுகின்றன. பெண் தன்னிலையாக இருந்து ஆண்களைப் பார்க்கும் கவிதைகள் இதில் இருக்கின்றன. ஆனால், இந்தக் கவிதைகள் ஆண்களைவிடப் பெண் களையே அதிகமாகக் கிண்டலுக்கு உள்ளாக்குகின்றன. மற்ற பெண் கவிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது பெருந்தேவி அதைச் சிருஷ்டிக்கும் விதம்தான். அதில் கூக்குரல் இல்லை. பெண்ணின் உடல் பாகங்கள், பாலியல் காட்சிகள் எல்லாமும் பெருந்தேவியின் கவிதைகளிலும் உண்டு. ஆனால், அவை அதிர்ச்சிக்காக உருவாக்கப்பட்டவையல்ல. கவிதையின் தேவை பொருட்டே வெளிப்படுகின்றன. பெருந்தேவிக்குக் கவிதையே பிரதானம்.