

பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி என்றாலே மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொடுப்பது, பினாயில் தயாரிக்கச் சொல்லித் தருவது என்றுதான் பலரும் நினைக்கின்றனர். இந்த நிலையை மாற்றிப் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரோஜாப் பூக்களைக் கொண்டும், சாக்லெட்களைக் கொண்டும் திருமணத்துக்கான மொத்த சீர்வரிசைப் பொருள்களை அலங்காரமாகச் செய்வது, வளைகாப்பு, குழந்தை நீராட்டு போன்ற விசேஷங்களில் இடம்பெறும் அலங்காரப் பொருள்களைச் செய்வது போன்றவற்றுக்கு உதவுகிறது ‘பாம்’ (Palm) தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
திருவள்ளூர், காட்டுப்பாக்கத்தில் செயல்படும் இந்த நிறுவனம் மகளிருக்கான சுய தொழில் ஆலோசனைகளையும் உதவிகளையும் பயிற்சிகளையும் தொடர்ந்து அளித்துவருகிறது. அண்மையில் பழைய வண்ணாரப்பேட்டை, ‘சத்யசாய் ஸ்கில் டெவலப்மென்ட்’ மையத்தில் ரோஜாப்பூக்களைப் பிரதானமாகக் கொண்டு செய்யப்படும் மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிப்பதற்கான ஒரு நாள் பயிலரங்கு நடத்தப்பட்டது.
செயற்கை வேதிப்பொருள்கள் கலப்பில்லாத இயற்கையான மணமூட்டிகளால் தயாரிக்கப்படும் தாம்பூலம், ரோஜாவின் இதழ்களைக் கொண்டு செய்யப்படும் குல்கந்து, உதட்டைக் காக்கும் பூச்சு, முகப்பூச்சு, ரோஸ் வாட்டர், ரோஸ் மில்க் பவுடர் போன்றவற்றைச் செய்வதற்கான பயிற்சிகளை எம்.எஸ்.எம். இ. பயிற்சியாளர்கள் என்.வரலட்சுமி, மாலினி கல்யாணம், மணிமேகலை, சத்யபிரியா ஆகியோர் வழங்கினர். அறக்கட்டளையின் நிறுவனர் மாலினி கல்யாணம் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கான பயிற்சியையும் அதன் மூலமாகப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.