

நம்மில் பலரும் செய்யும் விஷயமாக நிச்சயம் இது இருக்கும். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனே மருந்தகத்துக்குச் சென்று, அதை நிறுத்தும் மாத்திரையை உட்கொள்வதுதான் அது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே நமது சமூகத்தில் நிலவும் தவறான பார்வை.
வயிற்றுப் போக்குடன் சம்பந்தப்பட்ட மேலும் சில கற்பிதங் களையும் அறிவியல் வழியில் சரிசெய்வோம். வயிற்றுப்போக்கில் இரண்டு வகை உண்டு. ஒன்று, கிருமித் தொற்றால் ஏற்படுவது; இன்னொன்று, தொற்றல்லாத காரணங்களால் ஏற்படுவது.
கிருமிகளால் ஏற்படும் வயிற்றுப்போக்கு குழந்தைகளில் 90%க்கு மேலும் வயது வந்தவர்களில் 60%க்கு மேலும் வைரஸ்களால் ஏற்படுபவை. குழந்தைகளில் ரோட்டா வைரஸும், வயது வந்தோரில் நோரோ வைரஸும் முக்கியமானவை.
அடுத்தபடியாக, ஈ. கோலை, சால்மோனெல்லா போன்ற பாக்டீரி யாக்கள் ஏற்படுத்துகின்றன. குடற்புழுக்களும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும். ‘இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்’ எனும் நோயில், தொற்று இன்றி வேறு காரணங்களால் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். இதற்கு வேண்டுமானால் வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்துகள் பயன்தரலாம்.
கிருமித் தொற்றினால் ஏற்படும் வயிற்றுப் போக்கில், குடலில் தேங்கும் கிருமிகளையும், அவற்றால் சுரக்கப்பட்ட நச்சுப் பொருள் களையும் உடல் வெளியேற்றும். அதன் விளைவுதான், வயிற்றுப்போக்கு. மாறாக வயிற்றுப்போக்கை நிறுத்தும் மாத்திரைகளை உடனே உட்கொண்டால் கிருமி, அதன் நச்சுப் பொருள்கள் மேலும் குடலில் தேங்கி, பிரச்சினையை அதிகரிக்கும்.
நிகழ்வது என்ன?
கிருமித் தொற்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும் போது, அந்தக் கிருமிகளாலும், கிருமிகள் சுரக்கும் நச்சுகளாலும் குடலின் செல்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், குடலில் முறையாக நடக்கவேண்டிய ஊட்டச்சத்து, நீர், தாதுஉப்புகள் உள்ளிட்டவற்றை உறிஞ்சுதல் நடக்காமல் போகிறது.
வைரஸ் தொற்றினால் ஏற்படும் வயிற்றுப்போக்கில், குடல் குழாயில் அதிக அளவு உணவு மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து, தாதுஉப்பு உள்ளிட்ட பொருள்கள் உறிஞ்சப்படாமல் போவதால் சவ்வூடு பரவல் விதிப்படி உடலில் இருக்கும் நீர், தாது உப்புகள் அதிக அளவு, குடலின் குழாய்க்குள் வெளியேறி, மிக அதிகமான அளவு வயிற்றுப்போக்கு ஏற்படும்.