

பாம்புக்கடி குறித்தும் அதன் சிகிச்சை குறித்தும் இன்றளவும் சமூகத்தில் பல கற்பிதங்கள் நிலவிவருகின்றன. பாம்புக் கடித்தால் கடித்த இடத்தில் மூலிகைச் சாறு ஊற்றினால் போதும் என்றும், சில நேரம் கடித்தது நஞ்சற்ற பாம்பு என்று நினைத்து வீட்டிலேயே இருப்பதும், இன்னும் பல இடங்களில் கடித்த இடத்தில் கயிறு கொண்டு இறுக்கிக் கட்டுவது என நிலைமையை மேலும் மோசமாக்கும் பல செயல்களே தொடர்ந்து செய்யப்பட்டுவருகின்றன.
பாம்புக்கடித் தரவுகள்
ஆண்டின் எல்லா மாதங்களும் பாம்புக்கடி பதிவானாலும்கூட, ஜூன் முதல் செப்டம்பர் வரை 80% பாம்புக்கடி நிகழ்வுகள் நடந்தேறு கின்றன. பெரும்பான்மை நிகழ்வுகள் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமங்களிலேயே நிகழ்கின்றன.
கடிபட்டவர்களில் 14% பேருக்கு என்ன கடித்தது என்றே தெரியாது. இதை ‘அறியாக் கடி’ (Unknown Bite) என்று கூறுவோம். மருத்துவர்களைப் பொறுத்தவரை கடித்தது என்னவென்று தெரியாவிட்டால், அதைப் பாம்புக்கடியாக எண்ணியே முதலுதவி, தேவையான பரிசோதனைகள் செய்வது நடைமுறை.
நான்கு வகை
இந்தியாவைப் பொறுத்தவரை ‘பிக் ஃபோர்’ (பெரிய நான்கு) என்று நான்கு நஞ்சுப் பாம்புகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
* நல்லபாம்பு (Indian Cobra),
* கட்டு வரியன் (Common Krait),
* கண்ணாடி விரியன் (Russell's viper),
* சுருட்டை விரியன் (Saw scaled viper).
இந்த நான்கும் அதிக நஞ்சு கொண்ட பாம்பு வகைகள். இந்தியாவில் நிகழும் பாம்புக்கடி சார்ந்த மரணங்களுள் பெரும்பான்மை, மேற் சொன்ன நான்கால்தான் நடக்கின்றன.
பலரும் பாம்பு கடித்தால் கட்டாயம் பல் பதிந்த தடம் இருக்க வேண்டும் என்று அதைத் தேடிக் கொண் டிருப்பார்கள். பாம்புக்கடியைப் பொறுத்தவரை 3.8% பேருக்குப் பாம்பு கடித்த தடம் தெரியாது. தடமே இல்லாமலும் பாம்புக்கடி இருக்கலாம்.